குட் நியூஸ்... வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிப்பு!
கொரோனா பிரச்னை காரணமாக, வாகன ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், லாக்டவுன் விதிகளிலும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இதனை மனதில் வைத்து வாகனங்களுக்கான பதிவுச் சான்று, தகுதிச் சான்று, வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களுக்கான காலாவதி காலம் வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் வரும் செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் வாகன ஆவணங்கள் செல்லத்தக்கத்தாக கருதப்படும். இதனால், வாகன ஓட்டிகள் தடையில்லாமல் செல்வதற்கும், தற்போது ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்குமான வாய்ப்பை வழங்கும்.

கடந்த ஆண்டும் இதேபோன்று காலாவதியான வாகன ஆவணங்களுக்கு தொடர்ந்து நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆர்டிஓ அலுவலகங்கள் வழக்கமான பணியாளர் திறனுடன் செயல்படவில்லை என்பதால், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கும், ஆர்டிஓ அலுவலக பணியாளர்களுக்கும் சற்று ஆசுவாசத்தை தரும் விஷயமாக இருக்கும். வரும் மாதங்களில் நிலைமை சீராகும்பட்சத்தில் வாகன ஆவணங்களை புதுப்பித்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








