இதுக்கு முடிவே இல்லையா... கொரோனாவால் பலத்த அடி... மே மாதத்திலும் வாகன விற்பனை பெரும் சரிவு!
கொரோனா இரண்டாவது அலையால் கடந்த மாதம் வாகன விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு துவங்கிய கொரோனா பிரச்னையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்திலும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வாகனத் துறை கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலம் முதல் சற்றே ஏறு முகத்தில் சென்ற வாகன விற்பனை கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல மாநிலங்களில் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வாகன விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து மே மாதத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் வாகன டீலர்கள் மூடப்பட்டுள்ளதுடன் வாகன உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டது காரணிகளாக உள்ளன.

அகில இந்தியா வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, ஏப்ரல் மாதத்தைவிட கடந்த மாதம் விற்பனை 55 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை 53 சதவீதமும், மூன்று சக்கர வாகன விற்பனை 76 சதவீதமும், பயணிகள் வாகன விற்பனை 59 சதவீதமும், டிராக்டர் விற்பனை 57 சதவீதமும், வர்த்தக வாகன விற்பனை 66 சதவீதமும் குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 11,85,374 வாகனங்கள் ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 5,35,855 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 4,10,757 இருசக்கர வாகனங்களும், 21,636 மூன்று சக்கர வாகனங்களும், 85,733 பயணிகள் வாகனங்களும், 17,534 வர்த்தக ரக வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பல மடங்கு விற்பனை குறைந்துள்ளது.

எனினும், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், ஜூலை மாத மத்த்தியில் இருந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, வாகன விற்பனை படிப்படியாக மீள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பண்டிகை காலத்தில் வாகன விற்பனை இயல்புக்கு வரும் என்று கருதப்படுகிறது. இந்த நம்பிக்கையுடன் தற்போதைய கடினமான காலத்தை வாகன விற்பனை நிறுவனங்களும், டீலர்களும் கடந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








