மாருதி ஜிப்சி உடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்து கொண்ட வேலூர் தபால் நிலைய ஊழியர்கள்! எல்லாரும் கண் கலங்கிட்டாங்க!
மாருதி ஜிப்சி காருக்கு வேலூர் தபால்நிலைய ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஓய்வு பெறுவது என்பது மிகவும் வழக்கமான ஓர் நிகழ்வு. ஆனால், நம்முடைய வேலூரில் சற்று விநோதமான பணி ஓய்வு நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. ஆம், பல ஆண்டுகளாக வேலூர் தபால் நிலையத்தில் பணியாற்றி (பயன்பாட்டில் இருந்த) வந்த மாருதி ஜிப்சி கார் ஒன்றிற்கு பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்கும் அதிகமாக இக்கார் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினால்தான் தற்போது அந்த காருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அரசின் விதிகளின்படி பொது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

Source: The Hindu
ஆகையால், தற்போது வேலூர் தபால் நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த மாருதி ஜிப்சி அரசின் விதிகளின்படி அஞ்சல் மோட்டார் சர்வீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு, அந்த கார் வாகன அழிப்பிற்காக அனுப்பி வைக்கப்படும்.

வேலூர் தபால் நிலையத்தின் கண்கானிப்பாளர்கள் பன்பாட்டிற்காகவே இந்த மாருதி ஜிப்சி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி இப்பணியில் ஜிப்சி சேர்க்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை ஒரு சிறிய விபத்தைக்கூட மாருதி ஜிப்சி சந்தித்தது இல்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், தற்போதும் பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக ஜிப்சி இருப்பதாக வேலூர் தபால்நிலைய ஊழியர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகன அழிப்பிற்காக மாருதி ஜிப்சி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை 25 கண்கானிப்பாளர்கள் மாருதி சுசுகி ஜிப்சிஸையப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே மாருதி சுசுகி ஜிப்சிக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வேலூர் தபால் நிலைய ஊழியர்கள் சக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஊழியர்களோடு ஊழியராய் இரு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்த கார் வேலூர் தபால் நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த காரணத்தினால் பலர் ஜிப்சிக்கு கண்ணீர் கலந்த பிரியாவிடையை கொடுத்திருக்கின்றனர். தொடர்ந்து, காருடன் சேர்ந்து அவர்கள் புகைப்படமும் எடுத்திருக்கின்றனர்.

மாருதி சுசுகி நிறுவனம் ஜிப்சி காரை இந்தியாவில் முதல் முறையாக 1985ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த கார் ஓர் சிறந்த ஆஃப்-ரோடு வாகனம் என்கிற காரணத்தினால் காவல்துறை மட்டுமின்றி இந்திய ராணுவத்துறையிலும் ஜிப்சியின் பயன்பாடு இருந்து வருகின்றது.

தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளும் மாருதி ஜிப்சியை பயன்படுத்தி வருகின்றன. ஜிப்சி கார்கள் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லையென்றாலும் நாட்டின் ராணுவ பயன்பாட்டிற்காக தற்போதும் இக்கார் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

அதேசமயம் மிக விரைவில் புதிய தலைமுறை ஜிப்சியை விரைவில் மாருதி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவிற்காக நிறுவனம் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனை தயார்படுத்தி வருவதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் அறிமுகம்குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் மாருதி இன்னும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








