விற்பனையில் ஸ்கோடா குஷாக்கை முந்திய ஃபோக்ஸ்வேகன் டைகுன்!! 2021 அக்டோபர் மாத விற்பனை நிலவரம்!
கடந்த 2021 அக்டோபர் மாத விற்பனையில் ஸ்கோடா குஷாக்கை ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல் முந்தியுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் கீழ் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்ட்கள் செயல்படுவது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். இந்திய சந்தையில் எஸ்யூவி வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த இரு பிராண்ட்களில் இருந்து புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களாக குஷாக் & டைகுன் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவற்றிற்கு விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. ஆனால் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் இவை இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று போட்டியாக விளங்கி உள்ளதை தற்போது வெளியாகி இருக்கும் விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,413 குஷாக் எஸ்யூவி கார்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களின் எண்ணிக்கை 2,551 ஆகும். இந்த வகையில் மிகவும் சில யூனிட்கள் வித்தியாசத்தில் குஷாக்கை கடந்த மாத விற்பனையில் டைகுன் முந்தியுள்ளதை பார்க்கலாம்.

ஆனால் உண்மையில் இவை இரண்டில் எது முன்னிலை பெற்றாலும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கவலை இருக்காது. ஏனெனில் இவை இரண்டும் ஒரே ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் கீழ் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரு நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் இரண்டும் மொத்தமாக கிட்டத்தட்ட 5 ஆயிரம் யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே கூறியதுதான், இந்திய சந்தையில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாக தற்சமயம் உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பிராண்ட்களில் இருந்து இந்த பிரிவில் தயாரிப்புகள் உள்ளன. இந்த பிரிவை பெரும்பான்மையாக கொரிய மாடல்களே தற்போதைக்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் இந்த இரு நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை பற்றி பார்த்தோமேயானால், ஸ்கோடா குஷாக் & ஃபோக்ஸ்வேகன் டைகுன் இவை இரண்டும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ என்ற இரு வெவ்வேறான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 116 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனையும், 1.5 லி 4-சிலிண்டர் என்ஜின் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் நிலையான தேர்வாக வழங்கப்படுகின்றன.

அதேநேரம் 1.0 லி என்ஜின் உடன் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும், 1.5 லி என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸும் கொடுக்கப்படுகின்றன. மேலும் இதில் 1.5 லி என்ஜின் உடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழிற்நுட்பமும் வழங்கப்படுகிறது. காரின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதில் இந்த தொழிற்நுட்பம் முக்கியமானதாக விளங்குகிறது.

மற்றப்படி இந்த ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களில் டீசல் என்ஜின் தேர்வுகள் தற்போதைக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் இவற்றின் போட்டி மாடல்கள் பெரும்பாலானவற்றில் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது. குஷாக் எஸ்யூவி காரினை ரூ.10.49 லட்சம் என்ற ஆரம்ப விலை உடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அதிகப்பட்சமாக இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.59 லட்சம் வரையில் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுனின் ஆரம்ப விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் (ரூ.10.49 லட்சம்) உள்ளன. டைகுனின் டாப் ட்ரிம் நிலையின் விலை ரூ.17.49 லட்சமாகும். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட டைகுனிற்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்த எஸ்யூவி காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகவும், நடப்பு 2021ஆம் ஆண்டிற்கான அனைத்து யூனிட்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் எதிரொலியாக புக்கிங்கை தற்காலிகமாக ஃபோக்ஸ்வேகன் நிறுத்தியது.


Click it and Unblock the Notifications








