சூப்பர்... முதல் முறையாக வால்வோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு உயர்ந்த இந்தியர்... யார்னு தெரியுமா?
இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு முதல் முறையாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஜோதி மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் 1ம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார். சார்லஸ் ஃப்ரம்பிற்கு மாற்றாக, வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஜோதி மல்ஹோத்ரா பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் சார்லஸ் ஃப்ரம்ப் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.

நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி மல்ஹோத்ரா தற்போது சேல்ஸ் & மார்க்கெட்டிங் இயக்குனராக இருந்து வருகிறார். பதவி உயர்வின் மூலம் அவர் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு உயர்ந்த முதல் இந்தியர் ஜோதி மல்ஹோத்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் துறையில் ஜோதி மல்ஹோத்ராவிற்கு 24 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் உள்ளது. வால்வோ இந்தியா நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி மற்றும் ஃபியட் ஆட்டோ இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகளை ஜோதி மல்ஹோத்ரா வகித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோதி மல்ஹோத்ரா வால்வோ இந்தியா நிறுவனத்தில் இணைந்தார். தற்போது நிர்வாக இயக்குனராக உள்ள சார்லஸ் ஃப்ரம்ப் தலைமையின் கீழ், வால்வோ நிறுவனம் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை தொடங்கியது. அத்துடன் புதிய தலைமுறை மாடல்களையும் அறிமுகம் செய்தது.

சார்லஸ் ஃப்ரம்ப் தலைமையின் கீழ், வால்வோ நிறுவனம் இந்தியாவில் நன்கு அடித்தளம் அமைத்து கொண்டது. தற்போது அவரது இடத்திற்கு வரவுள்ள ஜோதி மல்ஹோத்ரா, இந்தியாவில் வால்வோ நிறுவனத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கலாம். ஜோதி மல்ஹோத்ராவிற்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து சார்லஸ் ஃப்ரம்ப் கூறுகையில், ''உலகின் சக்தி வாய்ந்த ஆட்டோமொபைல் சந்தையில் இந்தியாவும் ஒன்று. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதன் ஒரு பகுதியாக இருந்து வருவதில் நான் பெருமையடைகிறேன். இந்திய சந்தையில் தற்போது நாங்கள் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருந்து வருகிறோம்.

இங்கே ஆட்டோமொபைல் துறை குறிப்பிடத்தக்க அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. ஜோதி மல்ஹோத்ரா நிறுவனத்தை வெற்றிகரமான வழிநடத்துவார் என நான் நம்புகிறேன்'' என்றார். வால்வோ நிறுவனம் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமான வாகன உற்பத்தி நிறுவனமான திகழ்ந்து வருகிறது.

வால்வோ நிறுவனத்தின் கார்கள் சொகுசு அம்சங்களுடன், பாதுகாப்பிலும் தலைசிறந்து விளங்குவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. பிரபலங்கள் உள்பட வால்வோ நிறுவனத்திற்கு ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் இந்திய தலைமை பொறுப்புக்கு முதல் முறையாக ஒரு இந்தியர் வந்திருப்பது நாமும் பெருமைப்பட வேண்டிய விஷயமே.


Click it and Unblock the Notifications








