வருஷ கடைசிலதான் புது வண்டி வாங்கணும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!
வருட இறுதியில் புதிய வாகனங்களை வாங்குவது ஏன் சிறந்தது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கலாச்சாரத்தை பொறுத்தவரையில் புதிய வீடு கட்டிய பிறகு, புதிய கார் வாங்குவது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழலில் புதிய கார் வாங்குவது என்பது சற்று சவாலான விஷயமாகதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பண்டிகை காலத்தில்தான் பலரும் புதிய வாகனங்களை வாங்குகின்றனர்.

பண்டிகை காலம் புனிதமானது என்பதுதான் இதற்கு காரணம். இதுதவிர பண்டிகை கால கொண்டாட்ட மனநிலையை புதிய வாகனங்கள் இரட்டிப்பாக்கும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இவை அனைத்தையும் விட பண்டிகை காலத்தில் சலுகைகள் அதிகமாக கிடைக்கும் என்பதாலும் பலர் புதிய வாகனங்களை வாங்குகின்றனர்.

ஆனால் நடப்பாண்டு பண்டிகை காலத்தை நீங்கள் தவற விட்டிருந்தால் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் வருட இறுதியும் கூட புதிய வாகனங்களை வாங்குவதற்கு சரியான நேரம்தான். ஆம், இயர் எண்டிங்கில் புதிய வாகனங்களை வாங்குவது உண்மையிலேயே சிறந்த முடிவாக இருக்கும். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் விளக்குகிறோம்.

பெரிய தொகையை சேமிக்கலாம்!
ஆம், இது உண்மைதான். நீங்கள் வருட இறுதியில் புதிய வாகனங்களை வாங்கினால் பெரிய தொகையை சேமிக்கலாம். கார் அல்லது டூவீலர் என எந்த வகையான வாகனத்தை வாங்கினாலும் உங்களால் சேமிக்க முடியும். பொதுவாக வருட இறுதியில் பெரும்பாலான டீலர்ஷிப்கள் ஸ்டாக் க்ளியரன்ஸில் ஈடுபடும். எனவே அடுத்த வருடத்திற்கான புதிய மாடல் வரும் என்பதால், நடப்பாண்டு மாடலை குறைவான விலையில் வாங்க முடியும்.

இதுதவிர கவர்ச்சிகரமான தள்ளுபடிகளும் உங்களுக்கு கிடைக்கும். எனவே வருட இறுதியில் புதிய வாகனங்களை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும். ஆனால் வெறுமனே ஒரு டீலர்ஷிப்பை மட்டும் அணுகாமல் நிறைய டீலர்ஷிப்களில் விசாரியுங்கள். இதன் மூலம் உங்களுக்கு நிச்சமாக சிறந்த 'டீல்' கிடைக்கும்.

கூடுதல் இலவசங்கள்!
தள்ளுபடிகளுடன், ஏராளமான இலவசங்களும் வருட இறுதியில் கிடைக்கும். அதாவது வாகனங்களுக்கு தேவையான ஆக்ஸஸெரீஸ்களை இலவசமாக பெற முடியும். நீங்கள் எவ்வளவு பேரம் பேசுகிறீர்களோ? அதற்கு ஏற்ப உங்களுக்கு ஏராளமான இலவசங்கள் கிடைக்கும். எனவே இதற்காகவும் நீங்கள் வருட இறுதியில் புதிய வாகனங்களை வாங்கலாம்.

விலை உயர்வை தவிர்க்கலாம்!
பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனையில் வாகனத்தின் ஃபேஸ்லிஃப்ட் அல்லது புதிய தலைமுறை மாடலை ஒரு வருடத்தின் முதல் காலாண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். எனவே புதிய மாடலுக்காக பழைய மாடல்களை காலி செய்து இடத்தை தாராளமாக வைத்திருக்க வேண்டிய அவசியமும் டீலர்ஷிப்களுக்கு உள்ளது.

ஒரு வேளை கார் உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள காரின் புதிய மாடலை அறிமுகம் செய்யாவிட்டாலும் கூட விலை உயர்த்தப்படும். அதாவது 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரலாம். எனவே விலை உயர்வதற்கு முன்பாக குறைவான விலையில் நீங்கள் வாகனத்தை வாங்க வேண்டுமென்றால், வருட இறுதிதான் சிறந்தது.

இந்த தயக்கம் வேண்டாம்!
பொதுவாக வருட இறுதியில் புதிய வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்ப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. வருட இறுதியில் வாகனம் வாங்கினால் மறுவிற்பனை மதிப்பு, அதாவது ரீ-சேல் வேல்யூ குறைந்து விடும் என்பது பலரின் எண்ணம். ஆனால் இதற்காக நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் உங்களுக்கு வாகனம் குறைவான விலையில் கிடைப்பதுடன், தள்ளுபடி, இலவங்கள் என ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன.

பொதுவாக டீலர்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர சேல்ஸ் டார்க்கெட் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது உங்களுக்கு சிறப்பான சலுகைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதேபோல் நிறைய டீலர்ஷிப்களில் விசாரிப்பதற்கு மறந்து விடாதீர்கள். ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் என்னென்ன சலுகைகள்? என்பதை விசாரித்து முடிவு செய்யுங்கள்.

சில சமயங்களில் கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும். எனவே இது தொடர்பான செய்திகளை தெரிந்து கொண்டு அப்டேட்டாக இருங்கள். நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் இது தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








