உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
உலகின் முதல் லிடார் தொழில்நுட்ப வசதிக் கொண்ட மின்சார கார் அறிமுகமாகியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

உலகின் முதல் லிடார் தொழில்நுட்ப வசதிக் கொண்ட மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் எக்ஸ்பெங் நிறுவனமே இந்த அட்டகாசமான தொழில்நுட்பம் கொண்ட மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

'எக்ஸ்பெங் பி5' எனும் புதுமுக மின்சார காரையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஷாங்காய் வாகன கண்காட்சியில் இக்காரை காட்சிப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையிலேயே அதிகாரப்பூர்வமாக இக்காரை நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டை முன்னிட்டு கார்குறித்த புகைப்படம், வீடியோ மற்றும் சுவாரஷ்ய தகவல்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை இணையத்தில் வெளியாகிய ஒரு சில நிமிடங்களில் ஒட்டுமொத்த வாகன பிரியர்களின் கவனத்தையும் அது ஈர்க்க தொடங்கிவிட்டது.

மிக தெளிவாக கூற வேண்டுமானால் எக்ஸ்பெங் பி5 மின்சார காரில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் சில பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இக்காரின் முகப்பு பம்பரின் இரு முனைகளில் லிடார் (LiDAR) சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாதசாரிகள், பிற வாகனங்கள், சாலையோர பணிகள் என அனைத்தையும் ஸ்கேன் செய்யும்.

இவற்றை ஸ்கேன் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதுகுறித்த அறிவிப்பையும் டிரைவருக்கு வழங்கும். ஆகையால், நாம் கவனிக்கவில்லை என்றாலும் இக்கார் நமக்கான அனைத்து தகவல்களையும் அலர்ட் வாயிலாக வழங்கும். அலாரம், மின் விளக்கு சமிக்ஞை ஆகியவற்றின் வாயிலாக இது எச்சரிக்கை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த லிடார் தொழில்நுட்ப வசதியை பெறும் உலகின் முதல் மின்சார கார் இதுவே ஆகும். இந்த தனித்துவான வசிக்காக 12 அல்ட்ரானிக் சென்சார்கள், 5 மில்லிமெட்டர் அலை ரேடார்கள் மற்றும் 13 உயர் ரக கேமிராக்கள் ஆகியவை எக்ஸ்பெங் பி5 காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, இன்னும் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் சீன நிறுவனம் இக்காரில் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக 15.6 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் திறனிலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், சிறிய ஃப்ரிட்ஜ் என பல்வேறு பிரீமியம் அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோதாதென்று, பி5 மின்சார காரை கூடுதல் கவர்ச்சியான காராகவும் எக்ஸ்பெங் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இதன் முகப்பு தோற்றம் மிகவும் அட்டகாசமானதாக உள்ளது. ஸ்டைலிஷான அலாய் வீல், மெல்லிய கோடு போன்ற எல்இடி மின்விளக்கு ஆகியவற்றைக் கொண்டு பி5 மின்சார காருக்கு கூடுதல் அலங்கரிப்பை நிறுவனம் சேர்த்துள்ளது.

இதில் அதிகம் கவனத்தை ஈர்க்கும் வகையில் மெல்லிய கோடு போல் அமைந்திருக்கும் மின் விளக்கு உள்ளது. இது முகப்பு பகுதியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு போட்டியாக அமையும் உள்ளது.

இருப்பினும், டெஸ்லா மாடல3 மின்சார காரைக் காட்டிலும் அளவில் சற்று குறைந்த வாகனமாக இது உள்ளது. இருப்பினும், இடவசதிக்கு சற்று பஞ்சமில்லா வாகனம் இது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிறப்பு வசதிகள் கொண்ட காரையே நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் இந்திய வருகை என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications








