சிஎன்ஜி தொகுப்புடன் இந்தியாவின் முதல் டாடா பஞ்ச் கார்!! செலவான தொகை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவிலேயே முதல்முறையாக சிஎன்ஜி தொகுப்புடன் டாடா பஞ்ச் கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரை இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. பாதுகாப்புமிக்க எஸ்யூவி காராக விற்பனை செய்யப்பட்டாலும், இதில் ஒரே ஒரு 1.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட், இன்லைன்-3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டாடா பஞ்ச் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தாலும், ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வு சில வாடிக்கையாளர்களுக்கு போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்தகைய வாடிக்கையாளர்களில் ஒருவரான அஷிஷ் செங்கர் என்பவர் தனது பஞ்ச் காரை சிஎன்ஜி தொகுப்புடன் கஸ்டமைஸ்ட் செய்து கொண்டுள்ளார். இந்த சிஎன்ஜி தொகுப்பு ஆனது லோவாட்டோ சிஎன்ஜி தொகுப்பு என அழைக்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி பஞ்ச் கார் தொடர்பான படங்களை ஆசிஷ் செங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Image Courtesy: Ahish Sengar

இந்த படங்களின் மூலம், இந்த பஞ்ச் காரில் சிஎன்ஜி டேங்க் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். இந்த தொகுப்பு பொருத்தப்பட்ட பின்னரும் பின்பக்கத்தில் ஒரு உதிரி சக்கரத்தை தாராளமாக வைக்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. இந்த பகுதியில் மேலும் சில பொருட்களையும் வைக்க முடியும்.

இருப்பினும் தட்டையான தரைப்பகுதி பின்பக்கத்தில் கிடைக்காததால், பைகள் போன்ற எந்தவொரு இடத்திலும் வைக்கக்கூடிய பொருட்களை தவிர்த்து சில பொருட்களை வைக்க இயலாது. பின் இருக்கை வரிசையை மடக்கினால் கூடுதல் இடவசதி கிடைக்கும் என்றாலும், அந்த அளவிற்கு சவுகரியம் கிடைக்காது என்பதே எங்களது கருத்து.

ஆனால், இந்த சிஎன்ஜி தொகுப்புகளினால் காரின் எரிபொருள் செலவு வெகுவாக குறையும். இந்த குறிப்பிட்ட டாடா பஞ்ச் கார் ஒரு கிலோ இயற்கை எரிவாயுவிற்கு 29கிமீ தூரத்திற்கு இயங்கும் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி தொகுப்பினை ரூ.62,000 என்கிற தொகையில் பொருத்தியுள்ளதாக உரிமையாளர் தெரிவிக்கிறார்.

இவ்வாறான சிஎன்ஜி தொகுப்புகள் அன்றாட பயன்பாட்டிற்கும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றதாக விளங்குகின்றன. இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களுக்கான பற்றாக்குறையினால் நெடுஞ்சாலை பயணங்களை அவ்வப்போது மேற்கொள்பவர்களுக்கு மட்டும் சற்று சரிப்பட்டு வராது. ஆனால் இது தற்போதைய நிலையே. எதிர்காலத்தில் நாடு முழுவதும் சிஎன்ஜி நிலையங்களை விரிவுப்படுத்த ஒன்றிய அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.

இதனாலேயே சிஎன்ஜி மூலமாக இயங்கக்கூடிய கார்கள் சமீப காலங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு உதாரணமாக இவ்வாறு சிஎன்ஜி தொகுப்புடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட கார்களை கடந்த சில வருடங்களில் அதிகளவில் பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி போன்ற முன்னணி நிறுவனங்கள் அவற்றின் பிரபலமான கார்களின் சிஎன்ஜி வெர்சன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மிக முக்கிய காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான், தொடந்து அதிகரித்துவரும் பெட்ரோல் & டீசல் விலை உயர்வுகள். இதனாலேயே சிஎன்ஜி கார்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் கார்களின் அறிமுகங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காருக்கு வழங்கும் என்ஜின் தேர்வுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்த வகையில் வரும் ஆண்டுகளில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகள் புதியதாக பஞ்ச் மாடலில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இதில் டீசல் என்ஜின் உடன் சில வாரங்களுக்கு முன்பு டாடா பஞ்ச் கார் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பஞ்ச் டர்போ-டீசல் காரின் அறிமுகத்தை அடுத்த 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.48 லட்சங்களில் இருந்து ரூ.9.08 லட்சங்கள் வரையில் உள்ளன. விற்பனையில் இந்த டாடா காருக்கு மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் உள்ளிட்ட நடுத்தர-அளவு ஹேட்ச்பேக்குகளும், மாருதி ஸ்விஃப்ட், வேகன்ஆர், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்டவையும் போட்டியாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








