தாறுமாறாக ஓடிய கார்... ஜன்னல் வழியாக நுழைந்து தாக்குதலை தவிர்த்த இளைஞர்... குவியும் பாராட்டுக்கள்!
தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த காரை நிறுத்துவதற்காக இளைஞர் ஒருவர் செய்த துணிச்சலான செயல்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவல் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மிக சமீபத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை பாயிண்ட்ஸ் மேன் மயூர் ஷெல்கே தன் உயிரைப் பொருட்படுத்தாது அதிக வேகமாக வந்த ரயிலிலிடம் இருந்து காப்பாற்றினார். இவரின் இந்த உன்னத செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருந்தன. 'தண்டவாளத்தில் ஓர் உசைன் போல்ட்' என்று ஒரு சிலரால் மயூர் பாராட்டப்பட்டார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பலரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த காரை நிறுத்துவதற்காக இளைஞர் ஒருவர் செய்த துணிச்சலான செயல்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அவர், வேகமாக ஓடிக் கொண்டிருந்த காருக்குள், அதன் ஜன்னல் வாயிலாக நுழைந்து அதன் உள் இருந்த டிரைவரை தாக்கியிருக்கின்றார். இதன் பின்னரே நீண்ட நேர போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. முன்னதாக, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அதே கார் கண்மூடித் தனமாக தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகின்றது.

இதனால், பலர் காயம் அடைந்திருக்கின்றனர். மேலும், பலரின் வாகனங்கள் மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றது. இதனால், மோதலை ஏற்படுத்திய காரும் கடுமையாக சேதத்தை சந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் நொருங்கியிருந்தன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கோவிட்-19 வைரசுக்கான தடுப்பூசியை வழங்கும் மையத்தில் அந்த மர்ம நபர் தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றார். இதனால் பதறிய பலர் அங்கிருந்து தெறித்து ஓட ஆரம்பித்தனர். ஒரு சிலர் தொடர்ச்சியாக வட்டமடித்து அக்காரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அனைத்தும் தோல்வியைத் தழுவின. இப்படியான நேரத்திலேயே பெயர் அறியாத ஓர் இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரியல் லைஃப் ஹீரோ போல் செயல்பட்டு ஜன்னல் வாயிலாக நேராக காருக்குள் நுழைந்தார். அவர் உள்ளே நுழையும்போதே அவரது கால்களால் காருக்கு இருந்த மர்ம நபரை தாக்கியிருக்கின்றார்.

இதன் பின்னரே நீண்ட நேர போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம், அல்பானிய நாட்டின் டைரேன் (Tirane) எனும் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டில் மிக சமீபத்திலேயே பொது தேர்தல் நடைபெற்றது.

இதனை கவர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகங்களின் கேமிராக்களின் வாயிலாகவே பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் வெளியாகியிருக்கின்றன. காரை நிறுத்த இளைஞர் கையாண்ட விதம் பாராட்டக்கு உரியதாக அமைந்திருக்கின்றது.

மேலும், காரை இப்படியும் நிறுத்தலாம் என்பதை வெளிக்காட்டும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. ஆனால், மிகுந்த ஆபத்தான செயல் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், மிக துணிச்சலுடன் செயல்பட்டு தாக்குதல் நிகழ்த்திய மர்ம நபரை இளைஞர் போலீஸிடத்தில் பிடித்துக் கொடுத்திருக்கின்றனர்.
இதன்காரணமாக பலர் அப்பெயர் அறியா இளைஞரை வாழ்த்தி வருகின்றனர். இணையத்தில் இவரை ரியல் லைஃப் ஹீரோ என்றே அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இருப்பினும், தடுப்பூசி வழங்கும் மையத்தில் இதுமாதிரியான தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








