புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி இதுதானா? எகிறும் எதிர்பார்ப்பு!
2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon EV) எலெக்ட்ரிக் எஸ்யூவி தனி ஆளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தன் வசம் வைத்துள்ளது. இந்த சூழலில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இந்த புதிய மாடல், பெரிய பேட்டரி தொகுப்பை பெற்றிருக்கும். எனவே இதன் ரேஞ்ச் அதிகமாக இருக்கும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் (ரேஞ்ச்), 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேம்படுத்தப்பட்ட 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெரிய 40kWh பேட்டரி தொகுப்பை வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெரிய பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 400 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிகிறது.

இது பெரிய பேட்டரி தொகுப்பு என்பதால், அதிக இடவசதி தேவைப்படும். எனவே நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அடிப்பகுதியிலும், பூட் பகுதியிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதன் காரணமாக, 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எடையும் உயரவுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் ஒப்பிடும்போது, புதிய மாடலின் எடை சுமார் 100 கிலோ வரை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நேரடி போட்டி கிடையாது.

ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 2022 மாடல், ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் ஏப்ரல் 6ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஊடக துறையினருக்கு 'பிளாக் யுவர் டேட்' (Block Your Date) இ-மெயிலை அனுப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான மெயில் இதுவாகும். இதையெல்லாம் வைத்து பார்க்கையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 6ம் தேதிதான் 2022 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது.

புதிதாக விற்பனைக்கு வரவுள்ள 40kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட மாடலுடன், தற்போது விற்பனையில் உள்ள 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்ட மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.

இருப்பினும் தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய 2022 மாடலானது, 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதன் காரணமாக விலை உயரும்.

ஆனால் அதிகாரப்பூர்வ விலையானது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியில்தான் அறிவிக்கப்படும். எனவே அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள மாடலை போலவே, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய மாடலுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








