மைலேஜும் கிடைக்கனும்... பாதுகாப்பாகவும் இருக்கனுமா? இந்த 5 டீசல் கார்களை பாருங்க!!
புதியதாக கார் வாங்கும்போது பாதுகாப்புமிக்க காராக தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் நினைப்போம். அதிலிலும் அவ்வப்போது குடும்பத்துடன் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் சற்று பணம் செலவானாலும் பரவாயில்லை என பாதுகாப்பான காரை நோக்கியே செல்கின்றனர். ஏனெனில் எவரொருவரும் தங்களது குடும்பத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க விரும்புவதில்லை.
ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், பாதுகாப்பான கார் என்பதை எதை வைத்து தீர்மானிப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு காரின் பாதுகாப்பு தரம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய சுருக்கமாக GNCAP எனப்படும் உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு பிரோகிராம் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது தன்னிடம் வரும் புதிய கார்களை தனது அப்போதைய மதிப்பீட்டின்படி பல்வேறு மோதல்களுக்கு உட்படுத்தி சோதனை செய்து மதிப்பெண்களை வழங்குகிறது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு காரிலும் அடல்ட் பயணிகள் மற்றும் குழந்தை பயணிகளின் பாதுகாப்பிற்கான வசதிகள் எந்த அளவில் உள்ளன என்பதை முறையாக சோதித்து இந்த அமைப்பு வெளியிடுகிறது. பாதுகாப்பு தரத்தை எந்த அளவிற்கு கவனிக்கிறோமோ அதேநேரம் காரின் மைலேஜையும் கவனிக்க வேண்டியது அவசியம் தானே. அந்த வகையில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் GNCAP சோதனையில் அதிக மதிப்பெண்களை குவித்த 5 கார்கள்...

1. மஹிந்திரா எக்ஸ்யூவி300
சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300 ஜிஎன்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் மஹிந்திரா கார் ஆகும். அதாவது அடல்ட் பயணிகள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. எக்ஸ்யூவி300 காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
2. டாடா அல்ட்ராஸ்
க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் இந்திய பிரீமியம் ஹேட்ச்பேக் கார். அடல்ட் பயணிகள் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றிருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்தவரையில் 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது. அல்ட்ராஸ் டீசல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்துகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.
3. மஹிந்திரா எக்ஸ்யூவி700
உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற 5வது இந்தியன் கார். அடல்ட் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரங்களையும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் பெற்றுள்ள மாடர்ன் மஹிந்திரா கார் இதுவாகும். இன்னும் சொல்லப்போனால், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் எக்ஸ்யூவி300 காரையே முந்தியுள்ள மஹிந்திரா கார். கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700-இல் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
4. டாடா நெக்ஸான்
டாடா பிராண்டில் இருந்து ஜிஎன்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். முதலில் நெக்ஸான் இந்த சோதனையில் 4 நட்சத்திரங்களையே பெற்றிருந்தது. ஆனால் அதன்பின் டாடா நிறுவனம் நெக்ஸானை அப்டேட் செய்து மீண்டும் அனுப்பியதில் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்றது. இருப்பினும் அல்ட்ராஸை போல் குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையே நெக்ஸானும் ஏற்றுள்ளது. நெக்ஸானில் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
5. மஹிந்திரா மராஸ்ஸோ
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் பெரியதாக விற்பனையாகாத கார்களுள் ஒன்றாக மராஸ்ஸோ உள்ளது. அடல்ட் பயணிகள் பாதிப்பில் இந்த மஹிந்திரா எம்பிவி கார் 4 நட்சத்திரங்களையும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. மராஸ்ஸோவில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








