பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஆப்பிள் கார் விரைவில் வெளியாகிறது! எதிர்பார்க்காத செம அப்டேட் வந்துருக்கு
ஆப்பிள் நிறுவனம் தனது தானியங்கி கார்களை தயாரிப்பதாக அறிவித்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதற்கான பணியை மும்முரமாக செய்து வருகிறது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே தானியங்கி கார்களை தயாரிக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அதற்கான பல முன்னேற்பாடுகள் மற்றும் ஆப்பிள் காரின் மாதிரி வடிவங்களை அந்நிறுவனம் உருவாக்கியது. இது குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டது தான் இருக்கிறதே தவிர ஆப்பிள் கார் இதுவரை வந்தபாடில்லை.

இதற்கிடையில் எலான்மஸ்க் டெஸ்லா காரை அறிமுகப்படுத்தி தானியங்கி காராக செயல்பட வைத்து சாதனை படைத்து விட்டார். இந்நிலையில் இதோ வருகிறது அதோ வருகிறது என பூச்சாண்டி காட்டிய ஆப்பிள் கார் மீது மக்கள் கொஞ்சம் மோகத்தை இழந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆப்பிள் நிறுவனம் என்றுமே தரமான தயாரிப்புகளை மட்டுமே வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டது. தரம் என்றால் அதன் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் தரமாக இருக்க வேண்டும் என ஆய்வு செய்து வருகிறது. அதன் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் காப்பீட்டு உரிமை குறித்த ஆய்வுகளை நடத்தி வரும் நீக்கி ஏசியா சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் கார் குறித்த ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை பார்க்கும் போது ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிக்கும் திட்டத்தை கடமைக்கு செய்யவில்லை. அதில் தீவிரமாக ஆய்வு நடத்தி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டமைத்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டதன்படி ஆப்பிள் நிறுவனம் தனது தானியங்கி காருக்கான பல்வேறு காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளது. அதன்படி சமீபத்தில் அதன் சாஃப்ட்வேர், ஹார்டுவேர், ரைடிங் கம்ஃபோர்ட், சீட், சஸ்பென்சன் உள்ளிட் விஷயங்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்ல ஆப்பிள் நிறுவனம் தனது தானியங்கி காரில் vehicle-to-everything (V2X) தொழிற்நுட்பத்தை உட்புகுத்தி வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக அதாவது கடந்த 2000வது ஆண்டிலிருந்து இன்று வரை மொத்தம் 248 ஆட்டோமொபைல் குறித்த தொழிற்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தான் ஆட்டோமொபைலுக்கான அதிகமான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளது. அதில் 8 காப்புரிமையை பெற்றுள்ளது மற்றது ஆய்வில் உள்ளது.

இது மட்டுமல்ல கடந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் தனது கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனத்துடன் கைகோர்த்து இயங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இதை மறுத்துவிட்டது. ஆப்பிள் தனியாகவே இந்த இந்த தானியங்கி காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தில் சர்வதேச இயக்குநர் பதவியிலிருந்த Ujkashevic என்பவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அந்நிறுவனத்திற்காக தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது காருக்கான ஆட்டோபைலட் தொழிற்நுட்பத்தை உருவாக்க அந்நிறுவனம் ஒரு தெற்கு கொரியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தை நாடியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது தானியங்கி கார் முழுவதும் வெளிப்புறமாக எல்இடி போர்டுகளை பொருத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆப்பிள் தானியங்கி கார் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற தகவலை தரும். உதாரணமாக இந்த கார் எவ்வளவு வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. உள்ளிட்ட பல செசேஜ்களை தரும்.

இந்த ஆப்பிள் காரில் C1 சிப் மையமாக கொண்ட A12 Bionic புராசசர் பயன்படுத்தப்படுகிறது இது முற்றிலுமாக செயற்கை நுண்ணறிவை கொண்டு இயங்கும். இதில் முக்கியமா ஐ டிராக்கிங் வசதி இருக்கும் என தெரிகிறது. இந்த ஐ டிராக்கிங் எப்படி செயல்படுகிறது. இது எந்த வகையில் தானியங்கியாக காரை இயங்க உதவும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவிலேயே ஆப்பிள் காரை நிஜத்தில் காண ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








