புதுசா கார் வாங்க போறீங்களா? இந்த விஷயத்தை கேட்டால் உங்க முடிவு உடனே மாறீரும்... என்னனு தெரியுமா?
இந்தியாவில் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கவலையளிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆடி (Audi). இந்திய சந்தையில் பல்வேறு சொகுசு கார்களை ஆடி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை ஆடி இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆடி நிறுவனத்தின் கார்கள் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்தவை. அப்படி இருக்கையில், இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் விலை மேலும் உயரவுள்ளது. ஆம், விலை உயர்வு குறித்த அறிவிப்பைதான் ஆடி இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் விலை 3 சதவீதம் வரை உயரவுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சில கார்கள் என்றில்லாமல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆடி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த விலை உயர்வானது, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆடி இந்தியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாக விலையை உயர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி நிறுவனம் பல்வேறு சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஆடி ஏ4, ஆடி ஏ6, ஆடி ஏ8 எல், ஆடி க்யூ2, ஆடி க்யூ5 போன்ற கார்கள் முக்கியமானவை.

இதுதவிர சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி க்யூ7, ஆடி க்யூ8 போன்ற கார்களையும் ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. மேலும் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக், ஆடி ஆர்எஸ் 7 ஸ்போர்ட்பேக் மற்றும் ஆடி ஆர்எஸ் க்யூ8 போன்ற கார்களும் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றன.

இதில், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி க்யூ7 காருக்கு இந்திய பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைத்துறையினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் இந்த காரை தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர். இது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தவறாமல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தவுள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. அதை நிரூபிக்கும் வகையில், தற்போது கார் நிறுவனங்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன.

முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா (Mercedes-Benz India) நிறுவனமும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆடி நிறுவனத்தை போன்று, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் கார்களின் விலையை 3 சதவீதம் வரைதான் உயர்த்தவுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களின் விலையும் வரும் ஏப்ரல் மாதம் முதல்தான் உயரவுள்ளது.

ஆனால் இவை அனைத்தும் ஆரம்பம் மட்டுமே. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு கார் நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, இரு சக்கர வாகன நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிரடியாக உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் ஏற்கனவே கார்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விற்பனையும் சரிவடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கார்களின் விலை உயரவுள்ளதால், விற்பனை மேலும் சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தியாவில் தற்போது எரிபொருள் விலையும் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவும் கார்களின் விற்பனை சரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மறுபக்கம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தற்போது நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையில் சமீப காலமாக தொடர்ச்சியாக பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








