ஆட்டோ எக்ஸ்போவில் 3 சூப்பரான எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டம்!.. மூனுமே செம்ம ஒர்த்தானவை!
ஆசியாவின் மாபெரும் வாகன கண்காட்சிகளில் இந்தியாவின் 'ஆட்டோ எக்ஸ்போ' (Auto Expo) -வும் ஒன்று. இந்த நிகழ்வே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த கண்காட்சியில் மாருதி சுஸுகி நிறுவனம் பங்கு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பங்களிப்பின் அடிப்படையில் நிறுவனம் தனது மூன்று எதிர்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த திட்டம் போட்டிருப்பதாக தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் அறிமுகம் செய்ய தயார் செய்திருக்கும் மூன்று கார் மாடல்களுமே எஸ்யூவி ரக வாகனங்கள் ஆகும். மேலும், இந்த மூன்றில் ஒன்று எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார்களின் சிறப்புகள் என்ன?, குறிப்பாக, அது எந்தெந்த மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த தயார்படுத்தி இருக்கின்றது என்பது பற்றிய முழு விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

5 கதவுகள் கொண்ட ஜிம்னி:
சுஸுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஜிம்னி-யும் ஒன்று. இந்த கார் மாடலுக்க உலக நாடுகளில் வரவேற்பு மிக பலமாக உள்ளது. இந்த கார் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக பல மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதனை இப்போது வரை மாருதி சுஸுகி நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இந்த கார் மாடலையே நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி-யையே மாருதி சுஸுகி காட்சிப்படுத்த இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து விற்பனைக்கான அறிமுகத்தையும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா தார் காருக்கு மிக சிறந்த போட்டியாளனாக அது மாறும். இந்த கார் ஜிம்னி என்ற பெயரில் இல்லாமல் ஜிப்ஸி என்கிற பெயரிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பெயருக்கு இப்போது பலர் அடிமையாக இருக்கின்றனர்.

பலினோ கார் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் எஸ்யூவி ரக கார்:
மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவின் காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கும் மூன்று எஸ்யூவி ரக கார் மாடல்களில் பலினோ அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் எஸ்யூவி ரக காரும் ஒன்று. தற்போது சப்- காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் பிரெஸ்ஸா கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரீமியம் கார் மாடலாக பலினோ அடிப்படையிலான எஸ்யூவி காரை களமிறக்கும் திட்டத்தில் மாருதி சுஸுகி உள்ளது.
ஏற்கனவே இந்த காரின் சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி தொடங்கிவிட்டது. இந்த கார் மாடல் வழக்கமான பலினோவைக் காட்டிலும் சற்று பெரிய உருவம், அதிக அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் எக்கசக்க சிறப்புகளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் உள்ளன. இந்த கார் என்ன பெயரில் அறிமுகமாகும், என்னென்ன சிறப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது போன்ற முக்கிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விபரங்கள் வெளியீட்டின்போது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய எலெக்ட்ரிக் கார்:
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு செம்ம டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் அனைத்து மின்சார தயாரிப்புகளுக்கும் வரவேற்பு மிக அமோகமாக இருக்கின்றது. இந்த இடத்தை தட்டிப் பறிக்கும் விதமாக பிற பிராண்டுகளும் நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் விரைவில் எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனையை இந்தியாவில் தொடங்க இருக்கின்றது.
ஆனால், இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் மாருதி சுஸுகி மேற்கொண்டதாக தெரியவில்லை. அதாவது, இந்தியாவின் மின் வாகன சந்தையில் கால் தடம் பதிக்கும் விதமான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. இந்த நிலையிலேயே 2023 ஜனவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி மாருதி சுஸுகி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் காரைக் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பெயர் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இது மாருதி சுஸுகியின் தயாரிப்பு என்பதால் இந்தியாவில் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியிருக்கின்றது. மாருதி சுஸுகி இந்த மூன்று எஸ்யூவி ரக கார்களுடன் சேர்த்து இன்னும் சில மாடல்களையும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஃப்ளெக்ஸி ஃப்யூவல் மற்றும் சிஎன்ஜி என பல வாகனங்கள் இந்த நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மாருதி சுஸுகி மட்டுமின்றி இன்னும் சில நிறுவனங்களும் இந்த உலக புகழ்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தங்களின் எதிர்கால வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








