இனி சோப்பு டப்பாக்களை விக்க முடியாது... வருகிறது மத்திய அரசின் அதிரடி திட்டம்... மாருதி நிறுவனத்திற்கு உதறல்!
மத்திய அரசின் அதிரடி திட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாரத் என்சிஏபி (Bharat NCAP) திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பாரத் என்சிஏபி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எம்1 கேட்டகரி (M1 category) வாகனங்களுக்கு பாரத் என்சிஏபி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5 டன்களுக்கும் குறைவான மொத்த எடை கொண்ட 8 இருக்கைகளுக்கு மிகாமல் இருக்கும் பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படக்கூடிய வாகனங்களே எம்1 கேட்டகரியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால் கார்கள்.

பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ், கார்கள் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பிடப்படும். இந்த மோதல் சோதனைகளில் ஒவ்வொரு காரும் எப்படி செயல்படுகிறதோ, அதை பொறுத்து, ஸ்டார் ரேட்டிங்குகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பான கார்களை தேர்வு செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.

தற்போதைய நிலையில் 'மேட் இன் இந்தியா' கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பால் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இனிமேல் இந்தியாவிற்கு என சொந்தமாக கார் மோதல் சோதனை அமைப்பு இருக்கும். அதுதான் பாரத் என்சிஏபி. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலையில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் அசத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 3 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. அவை டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் ஆகும்.

மறுபக்கம் மஹிந்திரா நிறுவனம் தனது 2 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அவை மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகும். தற்போதைய நிலையில் இந்த 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளன.

இதுதவிர டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் பல்வேறு கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சூடியுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல கார்கள், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மண்ணை கவ்வி வருகின்றன.

எனவே பாரத் என்சிஏபி திட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. பாரத் என்சிஏபி திட்டத்தை அனைத்து கார்களுக்கும் கட்டாயமாக்க கூடாது என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கியவை என்ற கருத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாரத் என்சிஏபி திட்டம் கார் விற்பனை எண்ணிக்கையை அதிகரித்து கொள்வதற்கு, கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்தியாவில் சமீப காலமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னேறி விட்டது. இதற்கு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் சிறப்பான செயல்பாடுதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே பாரத் என்சிஏபி மோதல் சோதனைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிக ஸ்டார்களை வாங்கும் கார்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. முன்பு போல் அல்லாமல், தற்போது கார்களின் பாதுகாப்பிற்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








