சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் 1 லட்சமாவது கார்!! வெறும் 15 வருடங்களில் அசத்தலான மைல்கல்!
நமது சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து வெற்றிக்கரமாக 1 லட்சமாவது கார் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிஎம்டபிள்யூ தற்சமயம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் சென்னைக்கு அருகே கச்சடிமங்கலத்தில் தொழிற்சாலை உள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு 2007இல் இந்த தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகளை பிஎம்டபிள்யூ குழுமம் துவங்கி வைத்தது.

இங்கு தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் பிஎம்டபிள்யூ கார்கள் மட்டுமில்லாமல், மினி பிராண்டின் கண்ட்ரிமேன் கார்களும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது.

தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட 1 லட்சமாவது கார் என்கிற சிறப்பை பிஎம்டபிள்யூ 740எல்.ஐ எம் ஸ்போர்ட் தன்னிச்சை எடிசன் கார் பெற்றுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் பிரத்யேக முத்திரை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.47 கோடியாக உள்ளது.

சென்னை தொழிற்சாலையில் இத்தகைய மைல்கல்லை அடைந்திருப்பது குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப்பின் சென்னை தொழிற்சாலைக்கான நிர்வாக இயக்குனர் தாமஸ் டோஸ் கருத்து தெரிவிக்கையில், "1,00,000வது 'மேட்-இன் இந்தியா' கார் எங்கள் அசெம்பிளி லைன்களில் இருந்து வெளியேறுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமைக்குரிய நாள். இந்த சாதனையானது, குழுவின் கடின உழைப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையின் விளைவாகும்.

இதன் மூலம் சென்னையில் உள்நாட்டில் உற்பத்தி செயல்படும் ஒவ்வொரு பிஎம்டபிள்யூ அல்லது மினி காரும் உலகெங்கிலும் உள்ள மற்ற பிஎம்டபிள்யூ ஆலைகளை போலவே சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றன. மிகவும் திறமையான ஊழியர்கள், அதிநவீன தொழிற்நுட்பத்துடன் மேம்பட்ட உற்பத்தி செயல்முறைகள் மற்றும் நிலைத்தன்மையில் வலுவான கவனம் ஆகியவை இந்த வெற்றிக்கு தேவையான அம்சங்களை வழங்கின.

அதேநேரத்தில், 50% வரை அதிகரித்த உள்ளூர்மயமாக்கல் மற்றும் உள்நாட்டு சப்ளையர் கூட்டாளர்களுடனான வலுவான ஒத்துழைப்பு ஆகியவை சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைவருக்கும் அதிக மதிப்பை உருவாக்கியுள்ளது" என்றார். ஏற்கனவே கூறியதுதான், கடந்த 2007 மார்ச் 29ஆம் தேதி பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்த சென்னை தொழிற்சாலை திறக்கப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்களின் எண்ணிக்கையை வருடத்தோறும் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகரித்து வந்துள்ளது. தற்போதைக்கு பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே, 3 சீரிஸ், 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன், எம்340ஐ, 5 சீரிஸ், 6 சீரிஸ் க்ரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி பிராண்டின் கண்ட்ரிமேன் என மொத்தம் 13 மாடல்கள் சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முழுக்க முழுக்க 100% மின்சார ஆற்றலின் மூலமாக இயங்கும் இந்த தொழிற்சாலையில் மொத்தம் 650 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கார்கள் விற்பனையை பொறுத்தவரையில் கடந்த 2021 சிறப்பான ஆண்டாக அமைந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் மொத்தமாக 8,876 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் 8,236 பிஎம்டபிள்யூ கார்களும், 640 மினி கார்களும் அடங்குகின்றன. இது உண்மையில் மிக பெரிய விற்பனை வளர்ச்சி ஆகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் உற்பத்தி பணிகளை 40% வரையில் உள்ளூர் மயமாக்கி உள்ளது. இதன் வாயிலாக சில பிஎம்டபிள்யூ கார்களின் விலைகள் கடந்த மாதங்களில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் எம்340ஐ எக்ஸ்ட்ரைவ், எக்ஸ்7 மற்றும் 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் கார்களுக்கு தற்சமயம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதேபோல் இந்த நிறுவனத்தின் சமீபத்திய 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் மாடல்களின் ஸ்பெஷல் எடிசன்களும் சிறப்பான அளவில் விற்பனையாகுகின்றன. பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் மோட்டார்சைக்கிள்களும் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 5,191 பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








