கார்களின் விலையை உயர்த்த போவதாக பிஎம்டபிள்யூ அறிவிப்பு... எவ்ளோ சதவீதம் அதிகமாக போகுது தெரியுமா?
இந்தியாவில் விற்பனையாகி கொண்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவன கார்களின் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அதிரடியாக உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ (BMW) கார்களின் விலை 3.5 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வானது வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் விலையும் உயரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை ஈடுகட்டுவதற்காக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளது. ஆனால் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் முதல் கார் நிறுவனம் பிஎம்டபிள்யூ கிடையாது. முன்னதாக ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார் நிறுவனங்களும், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு காரணமாக, விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஆடி (Audi) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) ஆகிய 2 சொகுசு கார் நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலைகளை 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளன. இந்த 2 நிறுவனங்களின் சொகுசு கார்களின் விலையும் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்துதான் உயரவுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கார்களின் விலைகளை உயர்த்தவுள்ள நிறுவனங்களின் பட்டியலில் பிஎம்டபிள்யூ தற்போது இணைந்துள்ளது.

விலைகள் உயர்வதன் காரணமாக கார்களின் விற்பனை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற கார்களை வாங்க கூடியவர்கள் செல்வந்தர்களாகதான் இருப்பார்கள். எனவே அவர்களை இந்த விலை உயர்வு கடுமையாக பாதிக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஓரளவு விலை உயர்கிறது என்பதற்காக, தங்களது கனவு காரை வாங்கும் திட்டத்தில் இருந்து சொகுசு கார் பிரியர்கள் பின்வாங்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தங்களது கனவு காரை வாங்கும் திட்டத்தை அவர்கள் தள்ளி போடுவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான் என ஆட்டோமொபைல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களை, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7-சீரிஸ் சொகுசு காரைதான் பயன்படுத்தி வருகிறார்.

இது சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயன்பாட்டிற்காக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதற்கிடையே பிஎம்டபிள்யூ நிறுவனத்தை தொடர்ந்து மேலும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் மேலே குறிப்பிட்டிருப்பது சொகுசு கார் நிறுவனங்கள் மட்டுமே. இவை தவிர டாடா மோட்டார்ஸ்(Tata Motors) நிறுவனமும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு கார் நிறுவனங்கள் மற்றும் இரு சக்கர வாகன நிறுவனங்களும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலைகளை உயர்த்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சக்கர வாகன நிறுவனங்களை பொறுத்தவரை, இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவொரு முன்னணி நிறுவனமும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் வரும் நாட்களில் இந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சொகுசு கார்களை போல் அல்லாமல், குறைவான விலையில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








