சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் செம்ம தரமான சம்பவம் அரங்கேற இருக்கு... பிபிசிஎல்-இன் சூப்பரான முயற்சி!
தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்க பிபிசிஎல் திட்டம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் மிகப் பெரிய ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலேயே ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை அமைக்க இருக்கின்றது, பாரத் பெட்ரோலியம். சிசிஎஸ்-2 டிசி ரக ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களையே நிறுவனம் உருவாக்க இருக்கின்றது.

தமிழக மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் பொருட்டும், தற்போது மின் வாகனங்களை பயன்டுத்துவோர்க்கு தடையில்லா இயக்கத்தை வழங்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை பாரத் பெட்ரோலியம் மேற்கொள்ள இருக்கின்றது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வளர்ந்து வரும் புதிய வணிக பிரிவில் கவனம் செலுத்தும் விதமாக நாட்டில் உள்ள 7 ஆயிரம் வழக்கமான சில்லறை விற்பனை நிலையங்களை பன்முக எரிபொருள் விற்பனையாகவும், இவி சார்ஜிங் மையமாகவும் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

சுமார் 900 கிமீ இடைவெளியை கவர் செய்யும் வகையில் இந்த சார்ஜிங் மையங்கள் சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் அமைய இருக்கின்றன. பாரத் பெட்ரோலியத்தின் இந்த நடவடிக்கை மின் வாகன பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்க நிச்சயம் உதவும். இந்தியாவில் தற்போது மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே காட்சியளிக்கின்றன.

இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையிலேயே தற்போது அரசு களமிறங்கியிருக்கின்றது. அரசு மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் தனது பெட்ரோல் பங்க்குகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

பாரத் பெட்ரோலியம் உருவாக்க இருக்கும் சார்ஜிங் மையங்கள் அதிக வேகத்தில் மின் வாகனங்களை சார்ஜ் செய்ய உதவும். இந்த மையங்களையே தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உருவாக்கும் முயற்சியில் பிபிசிஎல் நிர்வாகம் களமிறங்கியிருக்கின்றது. இந்நிறுவனம், 2040-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கும் ஓர் நிறுவனமாக மாற திட்டமிட்டிருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே தனது வழக்கமான பெட்ரோல், டீசல் விற்பனையகங்களை மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மற்றும் சிஎன்ஜி போன்ற பன்முக எரிபொருள் விற்பனையகங்களாக மாற்ற திட்டமிட்டிருக்கின்றது. தற்போது பிபிசிஎல்-இன் கீழ் நாடு முழுவதும் 19 ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவற்றில் முக்கியமான பகுதிகளில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளே தேர்வு செய்யப்பட்டு அவை பன்முக எனர்ஜி நிறுவனங்களாக மாற்றப்பட இருக்கின்றன. நாட்டு மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு சற்றே வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், போதியளவு சார்ஜிங் மையங்கள் இல்லாத காரணத்தினால் இந்த வரவேற்பு தற்போதும் ஆரம்ப நிலையிலேயே காணப்படுகின்றது. இதனை உயர்த்த பிபிசிஎல்-இன் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








