அவங்க இறந்து 25வருஷம் ஆகுது... இப்பவும் அவங்க பயன்படுத்திய பொருளுக்கு இவ்ளோ மவுசா!!
இளவரசி டயானா பயன்படுத்தி வந்த சூப்பரான ஃபோர்டு (Ford) கார் ஏலத்திற்கு விடப்பட்டிருக்கின்றது. இந்த கார் யாருமே எதிர்பார்த்திராத விலைக்கு ஏலம் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளவரசி டயானா பயன்படுத்திய கார்களில் ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ (Ford Escort RS Turbo) -வும் ஒன்று. சற்று கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் அவரின் பயன்பாட்டில் இருந்த வாகனங்களில் ஒன்றாகவும் இது இருந்தது. சிலர் இந்த காரே அவரது ஃபேவரிட்டான கார்களில் ஒன்றாக இருந்ததாகவும் கூறுகின்றனர். இத்தகைய ஓர் வாகனமே கடந்த சனிக்கிழமை அன்று ஏலத்திற்கு விடப்பட்டது.

இந்த ஏலத்தில் யாரும் நம்ப முடியாத அதிக விலைக்கு அக்கார் ஏலம் போயிருக்கின்றது. 6,50,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு அந்த வாகனம் ஏலம் போயிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் ரூ. 5.20 கோடிக்கும் அதிகம் ஆகும். இவ்வளவு அதிகமான விலைக்கே இளவரசி டயானா பயன்படுத்திய காரை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் வாங்கியிருக்கின்றார்.

வாங்கியவரின் பெயர் மற்றும் பிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த காரை சில்வர்ஸ்டோன் எனும் ஏலம் விடும் நிறுவனமே விற்பனைக்குக் கொண்டு வந்தது. கிளாசிக் ரக கார்களை ஏலம் விடுவதற்கென்றே இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் பிரத்யேக நிறுவனம் இதுவாகும். ஏலத்தின்போது காரை வாங்குவதற்கு பலர் கடுமையான போட்டியிட்டதாக இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையிலேயே கடைசியாக 6.50 லட்சம் பவுண்டுகளுக்கு இளவரசியின் கார் ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இது நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக விலை என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. துள்ளியமாகக் கூற வேண்டுமானால் நிறுவனம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிக பிரீமியம் தொகைக்கு இக்கார் ஏலத்தில் விற்பனையாகியிருக்கின்றது.

பிரிட்டன் இளவரசி டயானாவால் 1980களில் பயன்படுத்திய காரே இந்த ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ. கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த வாகனம் தற்போதும் புதிதுபோல் காட்சியளிக்கின்றது. இளவரசி இறந்த 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்த வாகனம் ஏலம் விடப்பட்டிருக்கின்றது. கார்கள் மற்றும் காரை ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவரே இளவரசி டயானா என்பது குறிப்பிடத்தகுந்தது.

31 ஆகஸ்டு 1997 இல் பாரிசில் நடைபெற்ற கோரமான கார் விபத்தில் இவர் சிக்கினார். இது மிகக் கொடுமையான விபத்தாகும். இந்த விபத்தே இளவரசி டயானா இந்த உலகைவிட்டு மறைய காரணமாக மாறியது. தற்போது ஏலம் விடப்பட்டிருக்கும் எஸ்கார்ட் காரை 1985 தொடங்கி 1988 வரையில் அவர் பயன்படுத்தி வந்தார். இந்த காரைக் கொண்டு அவர் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்திருக்கின்றார்.

அந்தவகையில், அவர் பாரிஸின் பல்வேறு பகுதிகளில் இந்த காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போதும் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான புகைப்படங்களில் அவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் காரை ஓட்டுவது போன்றும், அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் பின்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டிருப்பதைப் போன்ற படங்களே அதிகளவில் உள்ளன.

ஃபோர்டு நிறுவனம் எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 காரை வெள்ளை நிறத்தில் மட்டுமே தயாரித்து வந்தது. ஆனால், இந்த நிறத்தை தவிர்த்துவிட்டு கருப்பு நிற காரையே தனக்கான வாகனமாக டயானா தேர்வு செய்தார். இத்துடன், தன்னுடைய பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு விஷயங்களையும் இந்த காரில் அவர் சேர்த்தார். இரண்டாவது ரியர்-வியூ மிர்ரர் போன்ற அம்சங்களை அவர் சேர்த்திருக்கின்றார்.

டயானா பயன்படுத்தி வந்த இந்த கார் 25 ஆயிரம் மைல்கள் மட்டுமே ஓட்டப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதன் எஞ்ஜின் இப்போதும் புதிதுபோல் இயங்கும் என யூகிக்க முடிகின்றது. இந்த கார் அவ்வளவு சூப்பரான சொகுசு கார் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், இங்கிலாந்தில் அப்போதைய நாட்களில் நல்ல விற்பனையைப் பெற்றது.

இதன் சூப்பர் கவர்ச்சி தோற்றம், அதிக திறனை வெளியேற்றும் பவர்ஃபுல் மோட்டார் உள்ளிட்ட காரணங்களுக்காகவே பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் இந்த காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே பிரிட்டனைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் வாங்கியிருக்கின்றார். இதற்கு முன்னதாகவும் டயானா பயன்படுத்தி வந்த மற்றொரு கார் சமீபத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
Image Courtesy: Silverstone Auctions


Click it and Unblock the Notifications








