பொங்கலுக்கு கார் வாங்கும் பிளான் இருக்கா? இதுல ஒன்ன சூஸ் பண்ணுங்க! 2022ல் சேஃபான கார் என அங்கீகாரம் பெற்றவை!
நிறைய கார்கள் 2022 இல் பாதுகாப்புகுறித்து மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் நல்ல பாதுகாப்பான வாகனம் என்கிற சான்றை பெற்றிருக்கின்றன. இந்த கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வரும் பொங்கல் தினத்தை புதிய காருடன் கொண்டாட திட்டம் போட்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக பாதுகாப்பான கார்களின் லிஸ்டை இந்த பதவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N):
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலில் மிக சமீபத்திலேயே ஸ்கார்பியோ என் இணைந்தது. இந்த எஸ்யூவி ரக கார் மிக அதிக பாதுகாப்பான என்கிற தகவலை குளோபல் என்சிஏபி கடந்த 12 ஆம் தேதி அன்றே வெளியிட்டது. இந்த தகவல் மஹிந்திரா நிறுவனத்திற்கு மேலும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்தது. சைடு இம்பேக்ட், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு என அனைத்திலும் இந்த கார் மிக சிறந்த புள்ளிகளைப் பெற்று ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலேயே இந்த கார் ஐந்து ஸ்டார்களைக் குவித்துள்ளது. ஆனால், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றது. இதை வைத்து பார்க்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஸ்கார்பியோ என் சற்று பின் தங்கியிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அதேவேளையில், பெரியவர்களுக்கு மிக தரமான பாதுகாப்பை இந்த கார் வழங்கும். இதற்கு நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜென் பாடி கட்டமைப்பு தளமே மிக முக்கியமான காரணமாக உள்ளது.
இந்த பிளாட்பாரத்தினாலேயே மிக உறுதியான காராக ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பாதுகாப்பிற்காக ஸ்கார்பியோ என் காரில் ஆறு ஏர் பேக்குகள், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் கருவி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி, ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், வெயிக்கிள் டைனமிக் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், ரோல் ஓவர் மிடிகேசன், வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், கேமிரா, பார்க்கிங் சென்சார்கள், இ கால் சிஸ்டம் மற்றும் எஸ்ஓஎஸ் சுவிட்ச் போன்ற அம்சங்களும் ஸ்கார்பியோ என்-இல் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா குஷாக் (SKODA KUSHAQ) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen TAIGUN):
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஸ்கோடாவின் தயாரிப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக குஷாக் இருக்கின்றது. இதுவே குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மிக சிறந்த பாதுகாப்பான கார் என்ற நற்சான்றைப் பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி அன்றே இதுகுறித்த தகவல் வெளியாகியது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று இந்த கார் அசத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கும் அதிக பாதுகாப்பை வழங்கும் என்பது இந்த ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி கடந்த அக்டோபரில் ஸ்கோடா குஷாக் காரை மட்டுமே மோதல் ஆய்விற்கு உட்படுத்தவில்லை, இதனுடன் சேர்த்து ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரையும் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. ஸ்கோடா குஷாக் மற்றும் டைகுன் இரண்டும் வெவ்வேறு பிராண்டுகளுடைய தயாரிப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இவை இரண்டும் கூட்டு முயற்சியின்கீழ் ஒரே தளத்தில் வைத்து தயாரிக்கப்படும் கார் மடால்கள் ஆகும்.
இதனால்தான் ஸ்கோடா குஷாக் கார் பெற்றிருக்கும் அதே பாதுகாப்பு ரேட்டிங்கையே ஃபோக்ஸ்வேகன் டைகுனும் பெற்றிருக்கின்றது. இந்த இரு கார்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகளாக எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பதாசாரிகளுக்கான பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம், 3 முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ஆறு ஏர் பேக்குகள், ரோல்-ஓவர் புரடக்சன், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவையே இந்த இரு கார்களும் மிக சிறப்பான ஸ்டார் ரேட்டிங்கை பெற காரணமாக உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus):
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரை அண்மையில் லத்தின் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் செடான் கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்று அசத்தியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க சந்தைக்கான வாகனமே இது ஆகும். இந்த கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவிற்கான தயாரிப்பு இன்னும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் குளோபல் என்சிஏபி இந்த பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாகவே இந்த மாத (2022 டிசம்பர்) தொடக்கத்தில் லத்தின் என்சிஏபி மோதல் ஆய்வை மேற்கொண்டது. அப்போது, ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் பெரியவர்களின் பாதுகாப்பில் 92.35 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 91.84 சதவீத புள்ளிகளையும் பெற்றது. இத்தகைய பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்திய தயாரிப்பு விர்சுஸும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லத்தின் அமெரிக்காவிற்கான விர்சுஸ் காரில் பாதுகாப்பு அம்சங்களாக தானாக பிரேக் பிடிக்கும் சிஸ்டம் மற்றும் இஎஸ்சி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3):
இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். சீன நிறுவனத்தின் இந்த தயாரிப்பு மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியது. சற்று விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காராக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரீமியம் வசதிகள் மிக அதிகமாக வழங்கப்பட்டிருப்பதனால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. இதுமட்டுமில்லைங்க மிக அதிக பாதுகாப்பான காரும்கூட. அண்மையில் யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த எலெக்ட்ரிக் கார் ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 91 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 89 சதவீத புள்ளிகளையும் பெற்றது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிற்கான அட்டோ3 இன்னும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. விரைவில் இது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia):
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஆக்டேவியாவும் ஒன்று. இந்த கார் மாடலின் ஐரோப்பியாவிற்கான யூனிட்டே அண்மையில் யூரோ என்சிஏபி அமைப்பின் வாயிலாக மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, இந்த கார் மிக சிறப்பாக செயலாற்றி ஐந்து ஸ்டார்களை பெற்றது. அடாஸ் போன்ற அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளை ஆக்டேவியாக ஸ்கோடா வழங்கியிருக்கின்றது. இதனாலேயே இக்கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றது. ஆனால், இந்திய மாடல் ஸ்கோடா ஆக்டேவியாவில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் ஆக்டேவியாவிற்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டு உள்ளது.
கியா இவி6 (Kia EV6):
கியா இவி6, இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காராக இது இருக்கின்றது. இந்தியாவில் இந்த காரின் விற்பனையை ஏற்கனவே கியா நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்த கார் மாடலையே சமீபத்தில் யூரோ என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் எலெக்ட்ரிக் கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. இதன் விளைவாக மிகுந்த அழகிய கார் மற்றும் மிகுந்த பாதுகாப்பான கார் என்ற பெருமையை அது சூடியது. பெரியவர்களின் பாதுகாப்பில் 90 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 86 சதவீத புள்ளிகளையும் அது பெற்றது குறிப்பிடத்தகுந்தது.
மேலே இந்த கார் மாடல்கள் மட்டுமின்றி லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover), லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover Sport) மற்றும் லெக்சஸ் என்எக்ஸ் (Lexus NX) ஆகிய கார் மாடல்களும் நடப்பு 2022 ஆம் ஆண்டில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கார் மாடல்களும் முன்னதாக பார்த்தவற்றைப் போலவே ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று கார் மாடல்களும் சொகுசு வசதிகள் நிரம்பிய ஆடம்பர ரக வாகனங்களாகும். இவையும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மூன்று கார் மாடலும் யூரோ என்சிஏபி வாயிலாகவே மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








