மிகவும் குறைவான விலையில் வரும் எலெக்ட்ரிக் காரின் பெயர் இதுதானா! டாடாவுக்கு செக் வைக்க போறாங்க!
பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் (Citroen) நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை (Electric Car) விற்பனைக்கு அறிமுகம் செய்ய தற்போது தயாராகி வருகிறது. சிட்ரோன் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த சி3 (Citroen C3) காரின் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இது சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் முதலில் இந்திய சந்தையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை சிட்ரோன் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. அதற்கு பிறகுதான், வெளிநாடுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், சிட்ரோன் இசி3 (Citroen eC3) என்ற பெயரில் அழைக்கப்படும்.

Image used for representation purpose only
இதில், 'இ' என்பது எலெக்ட்ரிக் என்பதை குறிக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) இந்த எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதை தொடர்ந்து உடனடியாக விலைகள் அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுவதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், இசி3 எலெக்ட்ரிக் காரை சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் காருக்கு சிட்ரோன் நிறுவனத்தால் குறைவான விலையை நிர்ணயம் செய்ய முடியும்.
சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்ற தகவலும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படுள்ளது. இந்தியாவில் ஒரு எலெக்ட்ரிக் கார் வெற்றி பெற வேண்டுமென்றால், விலையை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்வது அவசியம். இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் மட்டுமே கார் நிறுவனங்களால் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும். எனவேதான் சிட்ரோன் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது.
தற்போதைய நிலையில் 10 லட்ச ரூபாக்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் இங்கு அரிதான ஒன்றாகவே உள்ளன. இந்த குறையை சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8-9 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் அதிகமாக தென்படுகின்றன.
விலை குறைவானதாக இருந்தாலும் கூட, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 30 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் எல்லாம் வரும் வாரங்களில்தான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது.
எஸ்யூவி/ஹேட்ச்பேக் ரக கார்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இதன் டிசைன் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) போன்ற மாடல்களுடன், சிட்ரோன் இசி3 போட்டியிடும். இசி3 எலெக்ட்ரிக் கார் வெற்றி பெற்றால், சிட்ரோன் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








