ஓரங்கட்டப்படும் ஹேட்ச்பேக் ரக கார்கள்! கெத்து காட்டும் எஸ்யூவி கார்கள்! அப்படி என்னதான் இருக்கு இந்த எஸ்யூவில?
இந்தியாவில் எந்த ரக காருக்கு அதிகளவில் டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கிற தகவலை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

இந்தியர்கள் என்றாலே ஹேட்ச்பேக் கார் விரும்பிகள் என கூறுமளவிற்கு நாட்டில் மிக அதிகளவில் அவை நாட்டில் விற்பனையைப் பெற்றுக் கொண்டிருந்தன. இதற்கு மிக சிறந்த உதாரணம் மாருதி ஆல்டோ, டாடா இன்டிகா உள்ளிட்ட கார் மாடல்கள் ஆகும். கடந்த காலங்களில் இவற்றை ஆதிக்கமே விற்பனையில் மிக அதிகளவில் இருந்தன. ஆகையால், தற்போதும் இந்த கார் மாடல்களை அதிகளவில் நம்மால் சாலைகளில் பார்க்க முடிகின்றது.

ஆனால், இப்போது இந்த டிரெண்ட் மாறியிருக்கின்றது. ஆம், இந்தியர்கள் ஹேட்ச்பேக் கார்களை கைவிட தொடங்கியிருக்கின்றனர். மாறாக எஸ்யூவி ரக கார்களை அவர்கள் அதிகளவில் நேசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களாக எஸ்யூவி பிரிவில் அதிகளவில் புதுமுக வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விற்பனையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனை மிக வலுவாக நமக்கு தெரிவிக்கும் வகையில் சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) ஓர் தகவலை வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் தகவலை வைத்து பார்க்கையில் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் ஒவ்வொரு இரு கார்களில் ஒன்று எஸ்யூவி ரக கார்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை மாத கார்கள் விற்பனை தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவலை சியாம் வெளியிட்டிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த 2022 ஜூலை மாதத்தில் 2.94 லட்சம் யூனிட்டுகள் நான்கு சக்கரங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில், 1.37 லட்சம் யூனிட்டுகள் எஸ்யூவி ரக கார்களாகும். இது ஒட்டுமொத்த விற்பனையில் 47 சதவீதம் ஆகும். இத்தகைய அமோக வரவேற்பு எஸ்யூவி ரக கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதனாலேயே முன்னணி கார் உற்பத்தியாளர்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்யூவி ரக கார்களையே அதிகம் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில்கூட மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாக கிராண்ட் விட்டாரா எனும் எஸ்யூவி ரக காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதேபோல், டொயோட்டா நிறுவனமும் மாருதி சுஸுகியின் கூட்டணியில் உருவாக்கிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எனும் புதுமுக கார் மாடலை அறிமுகம் செய்தது. இவ்விரு கார்களுக்கும் இப்போதே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இரு கார்களின் விலையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

விரைவில் அவற்றின் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையிலேயே, அதாவது, விலைகூட தெரியாத நிலையில் இந்தியர்கள் அமோக வரவேற்பை இரு கார்களுக்கும் வாரி வழங்க ஆரம்பித்திருக்கின்றனர். மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியே கார் மாடலை புதுப்பித்து ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு ஆப்ஷன்களில் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்திருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை நெக்ஸான் எஸ்யூவி மற்றும் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ஆகிய இரு கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவையிரண்டும் பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் மாடல்களாகும். அதிலும், பஞ்ச் மிக மிக குறைவான விலைக் கொண்ட வாகனமாகும். இதன் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் ஆகும். இத்தகைய குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே அதிக உறுதியான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளுடன் பஞ்ச் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதேநேரத்தில், நெக்ஸான் எஸ்யூவி மின்சார மற்றும் பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எஸ்யூவி கார்கள் ஸ்போர்ட்ஸ் ரக கார்களின் அம்சம் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இந்தியர்களை அது அதிகளவில் கவர தொடங்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க எஸ்யூவி ரக கார்கள் தோற்றத்தில் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றன. கட்டுமஸ்தான உடல் மற்றும் பிரமாண்ட உருவம் இவையும் இந்தியர்கள் அதிகளவில் எஸ்யூவி ரக கார்களை விரும்ப காரணமாக இருக்கின்றன.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் அதேவேலையில் குறிப்பிட்ட சில ஹேட்ச்பேக் கார்கள் தற்போதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளான வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலினோ மற்றும் டிசையர் ஆகிய கார் மாடல்களுக்கு தற்போதும் சிறிதளவு குறைச்சலின்றி வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் டால் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் வேகன்ஆர் காரே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








