அரசின் அதிரடி திட்டம்... இனி எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய இவ்ளோதான் செலவு ஆகுமா? ஆச்சரியமா இருக்கே!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, மிகவும் குறைவான கட்டணத்தில், புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளில், மத்திய அரசுடன், பல்வேறு மாநில அரசுகளும் கை கோர்த்துள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கும் முயற்சிகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக டெல்லி செயல்பட்டு வருகிறது.

நாட்டின் தலைநகர் என்ற பெருமையுடன், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் தலைநகர் என்று சொல்லும் அளவிற்கு, முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, இந்த பணிகளில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வழங்குவது, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றுடன் நின்று விடாமல் டெல்லி அரசு தற்போது ஒரு படி மேலே சென்றுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என டெல்லி அரசு விரும்புகிறது. இதை சரியாக செயல்படுத்தினால், இன்னும் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என்பது டெல்லி அரசின் திட்டம். இதற்காக தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இதன்படி டெல்லியில் வரும் ஜூன் 27ம் தேதிக்குள் புதிதாக 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் ஒரு யூனிட்டிற்கு வெறும் 2 ரூபாயாக மட்டுமே இருக்கும்.

இதுகுறித்து டெல்லி மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ''வரும் ஜூன் 27ம் தேதிக்குள் டெல்லி அரசு புதிதாக 100 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளது. இந்த ஸ்மார்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த 100 சார்ஜிங் ஸ்டேஷன்களும் அமையவுள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன.

இதற்காக முக்கியமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 71 சார்ஜிங் ஸ்டேஷன்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்படவுள்ளது'' என்றார். குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் டெல்லி அரசின் முயற்சிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் டெல்லி போன்ற மாநிலங்கள் மிகவும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது தமிழக மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் தமிழகத்தில்தான், குறிப்பாக ஓசூர் பகுதியில்தான், மிகவும் முக்கியமான எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் முழு வீச்சில் எடுக்கவில்லை. எதிர்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்து, தமிழக அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என சமூக வலை தளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசை பொறுத்தவரை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








