உலகின் டாப்-செல்லிங் மின் வாகன பிராண்ட் எது தெரியுமா?.. அமெரிக்க நிறுவனத்தை அசால்டாக ஓரங்கட்டிய சீன நிறுவனம்!
உலகின் டாப் செல்லிங் மின்வாகன பிராண்டாக புதிய நிறுவனம் ஒன்று உருவெடுத்துள்ளது. அது எந்த நிறுவனம்?, முன்னதாக இந்த இடத்தை எந்த நிறுவனம் அலங்கரித்து வந்தது?, உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகளவில் பயணிகள் மின்சார வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. 61 சதவீதம் வரை இந்த ஆண்டு அது உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை 2.18 மில்லியன்களாக உயர்ந்துள்ளது. இந்த தகவலை வாகன உலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமில்லைங்க, உலகளவில் பெஸ்ட் செல்லிங் மின் வாகன உற்பத்தியாளராக புதிய நிறுவனம் ஒன்று உருவெடுத்திருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. பிஒய்டி நிறுவனமே உலகின் டாப் செல்லிங் மின்வாகன பிராண்டாக மாறியிருக்கின்றது. தற்போது, இந்திய சந்தையில் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருப்பதைப் போல் உலகளவில் பிஒய்டி (BYD Auto) நிறுவனத்தின் தயாரிப்புகளே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

முன்னதாக டெஸ்லா (Tesla) நிறுவனமே இந்த இடத்தைப் பிடித்திருந்தது. அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையிலேயே டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி பிஒய்டி நிறுவனம் உலகின் நம்பர் ஒன் இவி பிராண்ட் எனும் புகழை தட்டிப் பறித்துள்ளது.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமே இந்த பிஒய்டி. உலகளவில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதை வெளிக்காட்டும் வகையிலேயே அது உலகின் டாப் செல்லிங் மின் வாகன உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் பிஒய்டி நிறுவனம் 3,54,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்திருக்கின்றது.

ஆண்டு-டூ-ஆண்டு புள்ளி விபரத்துடன் இதை ஒப்பிட்டு பார்த்தால் இந்த எண்ணிக்கை 266 சதவீதம் வளர்ச்சி ஆகும். இத்தகைய சூப்பரான வளர்ச்சி பாதையை நோக்கியே சீன மின் வாகன உற்பத்தி நிறுவனம் பிஒய்டி பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதேவேலையில், டெஸ்லா நிறுவனமோ வெறும் 27 சதவீத விற்பனை வளர்ச்சியை மட்டுமே பெற்றிருக்கின்றது.

இந்நிறுவனம் உலகளவில் 2,54,000 யூனிட்டுகள் மின் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இதைக்காட்டிலும், சுமார் ஒரு லட்சம் யூனிட்டுகளை அதிகமாக விற்பனைச் செய்திருக்கின்றது பிஒய்டி நிறுவனம். இந்த எண்ணிக்கையே அந்நிறுவனத்தை உலக மின் வாகன சந்தையின் தலைவனாக மாற்றியிருக்கின்றது. இருப்பினும், நம் நாட்டில் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய இரு மின் வாகனங்களின் இருப்பால் டாடா மோட்டார்ஸே மின் வாகன சந்தையின் தலைவனாக இருந்து வருகின்றது.

இவையிரண்டும் இணைந்து கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,878 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விற்பனை எண்ணிக்கை 2021 ஜூலையைக் காட்டிலும் 323.2 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். இதுமாதிரியான மிக சூப்பரான வளர்ச்சியையே சமீப காலமாக பிஒய்டி உலகளவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, பிஒய்டி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகளில் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சீனாவிலும் மின்சார வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகத் தொடங்கியிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.64 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இதை கால இடைவெளியில் நடப்பாண்டில் 1.24 மில்லியன் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இது 92 சதவீத விற்பனை வளர்ச்சி ஆகும். இதுமாதிரியான சூப்பரான வளர்ச்சி பாதையை நோக்கியே இந்திய மின் வாகன சந்தையும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மேலே குறிப்பிட்டதைப் போல் டாடா நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கே இங்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேலையில், ஹூண்டாய், எம்ஜி, பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களும் இந்திய மின்வாகன சந்தையில் பங்களிப்பை வழங்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் பிஒய்டி நிறுவனமும் அதன் பங்களிப்பை வழங்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிறுவனம் அதன் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் காரை கேப் சேவை நிறுவனங்களுக்கு மட்டும் விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில் அதனை தற்போது தனிநபர் பயன்பாட்டாளர்களும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில நாட்களிலேயே நிறுவனம் புதிதாக அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த மின்சார காரின் வருகை இன்னும் ஒரு வாரங்கள் அல்லது மாதங்களில் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








