மின்சார வாகனம் வாங்கினா இவ்ளோ லாபம் இருக்கா?.. இத்தன நாளா இது தெரியாம போச்சே! உடனே ஒன்னு வாங்கிடணும்!
மின்சார வாகனத்தை வாங்கினால் கிடைக்கும் வரி சலுகை பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை காண்பதே மிக அரிதான ஒன்றாக மாறிவிடும் போலிருக்கு. ஏனெனில், நாட்டில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் மத்தியில் இவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் நாட்டின் முக்கிய சாலைகளில் பெரும் எண்ணிக்கையில் அவை காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதைவைத்து பார்க்கையில் அரசின் விடா முயற்சி வெற்றி பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. "அரசின் விடா முயற்சியா?, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க" என கேட்பவர்களுக்கான பதில் இதோ, மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன.

மானியம், வரி சலுகை உள்ளிட்டவற்றையே அரசுகள் மின் வாகன ஊக்குவிப்பின் ஒரு பங்காக வழங்குகின்றன. இதுமாதிரியான சலுகைகளால் பன் மடங்கு விலை குறைந்த நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறைவான விலை மட்டுமல்ல, வரி சலுகையால் பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. அவை என்னகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

மின்சார வாகனத்தை வாகன கடன் திட்டத்தின்கீழ் வாங்கும்போது உங்களுக்கு வருமான வரி சலுகைக் கிடைக்கும். 80இஇபி (80EEB)இன் கீழ் இந்த சலுகையை அரசு வழங்குகின்றது. இதுமட்டுமின்றி, ஜிஎஸ்டி வரி சலுகையையும் அரசு மின் வாகனத்திற்கு வழங்குகின்றது. முன்னதாக 12 சதவீதம் வரி சலுகை வழங்கப்பட்டது. இதில், தற்போது 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதோ இவற்றின் முழு விபரம்:
80இஇபி இன் கீழ் கிடைக்கும் வரி சலுகைகள்:
இந்தியாவில் பயன்பாட்டு பொருட்களை அரசு ஆடம்பர பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் என வெவ்வேறு விதமாக பிரித்து, அவற்றிற்கு பிரத்யேகமாக வரி விதித்து வசூலித்து வருகின்றது. அந்தவகையில், கார்கள் ஆடம்பர பொருட்களாக பார்க்கப்படுகின்றன. ஆகையால், இதனை கடனில் வாங்குவோர்களுக்கு எந்த வித வரி சலுகையும் வழங்கப்படுவதில்லை.

ஆனால், பசுமை இயக்கம் மிக கட்டாயமான ஒன்றாக மாறியிருப்பதால் மின் வாகனத்தின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அரசு இதற்கு மட்டும் வரி சலுகையை அறிவித்திருக்கின்றது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதே 80இஇபி விதி ஆகும். இது வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி சலுகையை வழங்க உதவும். இந்த விதியின்கீழ் புதிய மின்சார வாகனத்தை கடனில் பெறுவோர்களுக்கு, அவர்கள் செலுத்தும் முழு வட்டியில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்காக வழங்கப்படுகின்றது. இது நான்கு மற்றும் இரண்டு சக்கரம் என இரு ரக மின் வாகனங்களுக்கும் பொருந்தும்.

80இஇபி இன் கீழ் வரி சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகள்:
இந்த விதியின்கீழ் வரி சலுகையை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை,
இதற்கு முன்னதாக மின்சார வாகனத்தை வைத்திருக்காதவரா இருத்தல் அவசியம். அதாவது முதன் முதலில் மின் வாகனத்தை வாங்குவோருக்கே 80இஇபி இன் கீழ் வரி சலுகை வழங்கப்படும்.
என்பிஎஃப்சி, பதிவு செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்தே கடன் பெற்றிருத்தல் வேண்டும்.

தனிநபராக இருத்தல் அவசியம். வரி சலுகையை பெற வேண்டும் எனில் தனி நபராக இருத்தல் வேண்டும். இது வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படாது.
1 ஏப்ரல் 2019 மற்றும் 31 மார்ச் 2023-க்கு இடையில் கடனில் மின்சார வாகனங்களை வாங்கிய அனைத்து தனி நபர்களுக்கும் 80இஇபி இன் கீழ் வழங்கப்படும் வருமான வரி சலுகை பொருந்தும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, மெகாலயா, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் அவரவர்களுக்கான மின்வாகன ஊக்குவிப்பு கொள்கையை அறிவித்திருக்கின்றன. இதில், டெல்லி, குஜராத், மஹாரஷ்டிரா மற்றும் மெகாலயா போன்ற மாநிலங்கள் மின் வாகனங்களை வாங்குவோர்க்கு சலுகைகளை வழங்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றன.

ஆனால், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் உற்பத்தியாளர்கள் நிலையில் சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் அதன் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றன. இதுமாதிரியான சலுகைகளின் விளைவாக தற்போது மின் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்துள்ளது. இதனால், தற்போது நாட்டின் முக்கிய சாலைகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








