நாட்டில் மேற்கொள்ள இருந்த இன்னொரு பிளானையும் 'கை' விட்டது ஃபோர்டு... இந்தியாவே வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க!
ஃபோர்டு (Ford) நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த ஓர் முக்கியமான திட்டத்தை கை விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபோர்டு (Ford) இந்தியா நிறுவனம் சென்னை மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வாகனங்களை தயாரித்தல் மற்றும் விற்றல் போன்ற வர்த்தக செயல்களை மேற்கொண்டு வந்தது. ஆனால், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் போதுமான வரவேற்புக் கிடைக்காத காரணத்தினால் விற்பனையில் பல மடங்கு சரிவை நிறுவனம் சந்திக்கத் தொடங்கியது.

இதனால், பெரும் பொருளாதார சிக்கலில் அது சிக்கியது. இந்த சிக்கலில் இருந்து மீளும் விதமாக நிறுவனம் நாட்டில் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைகளையும் கை விட்டது. அதாவது, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்து முக்கிய செயல்பாடுகளுக்கும் ஃபோர்டு முற்று புள்ளி வைத்தது.

இதனைத் தொடர்ந்து, தனக்கு சொந்தமான வாகன உற்பத்தி ஆலைகளை கை மாற்றும் முயற்சியில் அது ஈடுபட்டது. அதேநேரத்தில், தனது குறிப்பிட்ட சில ஆலைகளில் குறிப்பிட்ட வாகன தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், சென்னை ஆலையில் உலக சந்தைக்கான மின்சார வாகனங்களை நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனவே விரைவில் நிறுவனம் மீண்டும் வாகன உற்பத்தியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தகவலையே நிறுவனம் தற்போது பொய்யாக்கியிருக்கின்றது. அதாவது, இந்தியாவில் மின் வாகனம் தயாரிப்பதற்காக போட்டு வைத்திருந்த திட்டத்தை ஃபோர்டு கை விட்டிருக்கின்றது.

இதுகுறித்த தகவலை சென்னை ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு நிறுவனம் நேற்று (வியாழன்) காலையே அறிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு சில சலுகைகளை வழங்கி வருகின்றது. இதற்கு ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்திருந்தநிலையில், அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், நிறுவனம் அனைத்து செயல்களுக்கும் முற்று புள்ளி போட்டிருப்பதனால், குறிப்பிட்ட சலுகை விண்ணப்பத்தை திரும்ப பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் எந்த முதலீட்டையும் இந்தியாவில் மேற்கொள்வதற்கு தயாராக இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியையும் அது மேற்கொள்ளாது என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து வெளியாகியிருக்கின்றது. நிறுவனம், இந்தியாவில் எந்தவிதமான மின்வாகன உற்பத்தியையும் ஏற்றுமதிக்காக மேற்கொள்ளாது என அந்நிறுவனத்தின் முக்கிய நபர் ஒருவர் கூறியுள்ளார்.

நிறுவனம் இந்திய சந்தையைவிட்டு வெளியேறுவதாக செப்டம்பர் 2021இல் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, நாட்டை விட்டு அது வெளியேறியும்விட்டது. அதேவேலையில், அதன் உற்பத்தி ஆலைகளை மாற்று வழியில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் அது ஆராய்ந்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, சனந்த் குஜராத் ஆலை மற்றும் சென்னை ஆலை ஆகிய இரண்டையும் விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே டாடா மோட்டார்ஸுக்கு சனந்த் ஆலையை விற்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த பேச்சு வார்த்தை தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இதுதவிர இன்னும் பல நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
Source: moneycontrol


Click it and Unblock the Notifications








