பலமுறை உருண்டு தலைகீழாக கவிழ்ந்த டாடா கார்... தூசியை தட்டி விட்டு அசால்டாக வந்த பயணிகள்... வேற லெவல் சம்பவம்!
பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் இருந்து 5 பயணிகளின் உயிரை டாடா பன்ச் கார் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா பன்ச் கார் கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான காராகவும், அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் டாடா பன்ச் உருவெடுத்துள்ளது. டாடா பன்ச் காரை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆனால் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை டாடா பன்ச் பெற்றிருப்பதுதான், வாடிக்கையாளர்கள் இந்த காரின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பது தற்போது நடைபெற்ற ஒரு விபத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிகில் ராணா என்ற யூ-டியூப் சேனலில் டாடா பன்ச் கார் பயங்கரமான விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரு டாடா பன்ச் கார் விபத்தில் சிக்கியதாக இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய டாடா பன்ச் கார் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாக இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நெடுஞ்சாலையில் இருந்த டிவைடரில் மோதியுள்ளது. இந்த விபத்திற்கு என்ன காரணம்? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் இந்த கார் சாலையில் பலமுறை உருண்டு, தலை கீழாக கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடைபெற்றபோது இந்த காரில் டிரைவர் உள்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், டாடா பன்ச் கார் பயங்கரமான விபத்தில் சிக்கியபோதும் உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. அனைவரும் உயிர் தப்பி விட்டனர். விபத்தில் சிக்கிய டாடா பன்ச் கார் அனைத்து பகுதிகளிலும் கடுமையாக சேதம் அடைந்திருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

இருப்பினும் 5 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பியிருப்பது மிகப்பெரிய விஷயம்தான். டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.45 புள்ளிகளை ஸ்கோர் செய்து டாடா பன்ச் கார் அசத்தியது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 40.89 புள்ளிகளை டாடா பன்ச் ஸ்கோர் செய்தது.

அதிக பாதுகாப்பை வழங்குவதால், டாடா பன்ச் காரை வாங்குவதற்கு தற்போது நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. டாடா நிறுவனம் ஏற்கனவே டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது.

இதுதவிர கூடிய விரைவில் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வரிசையில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. டாடா நிறுவனத்தின் பன்ச் மட்டும் பாதுகாப்பான கார் கிடையாது.

கூடவே அந்த நிறுவனத்தின் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களும் பாதுகாப்பானவைதான். பன்ச், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய மூன்று கார்களுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன. அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் போன்ற கார்களும் இதற்கு முன்பாக விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.

இதன் காரணமாக இந்த கார்களின் விற்பனை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களில் ஒன்றை வாங்குவது குறித்து யோசனை செய்யலாம். தற்போது பாதுகாப்பிற்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் போன்ற கார்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதுதவிர மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 போன்ற கார்களும் பாதுகாப்பானவைதான். இந்த கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக ஸ்கோர் செய்துள்ளன.
தற்போதைய நிலையில் டாடா நிறுவனத்தின் பன்ச், அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி700 ஆகிய 5 இந்திய கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதில் பன்ச் கார், மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது.

அல்ட்ராஸ் கார் பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. நெக்ஸான், எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் வரும் காலங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications