இந்த அவார்னஸ் வீடியோவ இந்தியாவின் பிற மொழிகளிலும் அரசு வெளியிட்டிருக்கலாம்! எல்லோருமே தெரிஞ்சிக்கணும் இல்லையா!
மத்திய அரசாங்கம் சூப்பரான அவார்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சொல்ல வருவது என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றைக் குறைக்கும் பொருட்டு வாகன போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சமீபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இறப்பு போக்குவரத்து விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரக் காரணமாக அமைந்திருக்கின்றது.

சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் அதி-வேகத்தில் பயணித்த காரணத்தினால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்த்ரியும், அவரது சக நண்பரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து நிகழ்வு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையும், கேள்வி குறியையும் எழுப்பியது. ஏனெனில் அவர் பயணித்தது மிக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட சொகுசு வாகனம் ஆகும்.

இருப்பினும், விபத்தில் சிக்கி அவர் பலியாகினார். இதற்கு காரின் அதிக வேகம் ஓர் முக்கிய காரணமாக இருந்தாலும், அவர் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதே முதன்மையான காரணமாக இருக்கின்றது. சைரஸ் மிஸ்த்ரி பயணத்தின்போது சீட்பெல்ட்டை அணியவில்லை. இதன் விளைவாகவே அவர் விபத்தில் பலியாகினார்.

இந்த காரணத்தினாலேயே இனி பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், சீட் பெல்ட் ரிமைண்டர் அனைத்து வாகனங்களில் கட்டாயம் இருக்க வேண்டும் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டரைக் கட் செய்யும் கருவிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அந்தவகையில், அனைத்து வாகனங்களிலும் ஆறு ஏர்பேக் கட்டாயம் என்கிற புதிய விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த ஆறு ஏர் பேக்கின் முக்கியத்துவத்தை விளக்கக் கூடிய விழிப்புணர்வு வீடியோவையே தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோவில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருக்கின்றார்.

6 ஏர் பேக்குகள் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும். எனவேதான் இதனை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் அரசு தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, மாருதி சுஸுகி மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு வரவேற்பை வழங்கவில்லை. வாகனங்களின் விலையை அதிகரிக்கச் செய்துவிடும் நடவடிக்கையாக இதனை நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆகையால், அனைத்து பயணிகள் கார்களிலும் 6 ஏர் பேக்குகளைக் கட்டாயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. இந்த நிலையிலேயே ஆறு ஏர் பேக்குகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக புதிய வீடியோவை மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கின்றது.

இந்திய சலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் இந்த விழிப்புணர்வு கட்டாயம் என்பதால் இவ்வீடியோவை நாட்டின் பிற மொழிகளிலும் அரசு வெளியிட்டிருக்கலாம் என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
6 एयरबैग वाले गाड़ी से सफर कर जिंदगी को सुरक्षित बनाएं।#राष्ट्रीय_सड़क_सुरक्षा_2022#National_Road_Safety_2022 akshaykumar pic.twitter.com/5DAuahVIxE
— Nitin Gadkari (nitin_gadkari) September 9, 2022
அனைத்து பயணிகள் வாகனங்களிலும் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் என்கிற அறிவிப்பை இந்த ஆண்டின் ஜனவரியில் மத்திய அரசு வெளியிட்டது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த அறிவிப்பால் ஆரம்ப நிலை (விலை குறைவான) வேரியண்டுகளில்கூட ஆறு ஏர் பேக்குகள் இடம் பெற இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து கார்களின் விலையும் கணிசமாக உயர இருக்கின்றது.

இதன் விளைவாக புதிய வாகனங்களின் விற்பனை பலத்த அடியை சந்திக்கும் என வாகன உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். எனவேதான் நிறுவனங்கள் இப்புதிய விதிக்கு எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஆனால், அரசின் இந்த விதியால் வாகனங்களின் விலை அந்தளவிற்கு கடுமையாக உயர்ந்துவிடாது என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இதுகுறித்து மக்களவையில் பேசி அவர், "ஓர் ஏர் பேக்கின் விலையே ரூ. 800-தான்" என தெரிவித்தார். மேலும், 6 ஏர் பேக்குகளை கட்டாயப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். அதேவேலையில், அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதால் நுழைவு நிலை வேரியண்டுகளுக்கு மட்டும் விதிவிலக்கு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








