ஒரு ஃபார்ச்சூனர் காரை வித்தா அரசுக்கு 18 லட்சம் ரூபா கிடைக்குமா!.. அப்போ உற்பத்தியாளருக்கு கிடைப்பது எவ்வளவு?
ஒரு ஃபார்ச்சூனர் காரை விற்றால் அரசுக்கு ரூ. 18 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் விற்பனையில் மிக பெரிய லாபத்தை எடுப்பதைப் போலவே இந்திய அரசாங்கம் புதிய கார் விற்பனையில் மிக பெரிய வருவாயை ஈட்டுவது யுட்யூப் சேனல் ஒன்றின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. சிஏ சாஹில் ஜெயின் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அரசுக்கு ஒரு ஃபார்ச்சூனர் கார் விற்பனைச் செய்வதன் வாயிலாக மட்டும் 18 லட்ச ரூபா சம்பாதிப்பது தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக, ஓர் ஃபார்ச்சூனர் காரின் வாயிலாக டொயோட்டா நிறுவனம் எவ்வளவு லாபம் எடுக்கின்றது, இதேபோல், விற்பனையாளருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கின்றது மற்றும் அரசுக்கு கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட அனைத்து விபரங்களையே அவர் பிரித்து மிக தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

அதாவது, ஓர் ஃபார்ச்சூனர் கார் உரிமையாளர், உற்பத்தியாளருக்கு செலுத்தும் தொகை, அங்கீகரிக்கப்பட்ட வியாபாரி வழங்கும் கமிஷன் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு செலுத்தும் வரி என மூன்றாக பிரித்து தெளிவுப்படுத்தியிருக்கின்றார். இதன் வாயிலாக முன்னதாக நம்பப்பட்டு வந்த பல தகவல்கள் பொய்யாகியிருக்கின்றன.

நம்மில் பலர் வாகன உற்பத்தி நிறுவனம் பெரும் தொகையை லாபம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதுதான் இல்லை. அரசுக்கு கிடைப்பதைக் காட்டிலும் மிக மிக சொற்பளவிலான லாபத்தையே அவை ஈட்டி வருகின்றன. இதனையே சாஹில் ஜெயின் யுட்யூப் சேனல் நமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 39.28 லட்சம் ஆகும். அனைத்து வரி மற்றும் காப்பீட்டு செலவுகள் உட்பட ஆன்-ரோடில் இக்காருக்கு ரூ. 47.35 லட்சம் ஓர் வாடிக்கையாளர் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பெரும் தொகையில் கார் உற்பத்தியாளரான டொயோட்டாவிற்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை லாபமாக சென்று சேர்கின்றது.

அதேவேலையில், கார் டீலர்களுக்கு 2 முதல் 2.5 சதவீதம் வரை ஒட்டுமொத்த தொகையில் கமிஷனாக செல்கின்றது. சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை ஷோரூம் நிர்வாகம் வருவாய் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அதன் மார்ஜின் விலையில் இருந்து ஒரு ரூபாயைக் கூட சலுகையாக வழங்கவில்லை என்றால் இத்தகைய பெரும் லாபத்தை அதால் ஈட்ட முடியும் யுட்யூபர் தெரிவித்திருக்கின்றார்.

இவரின் இந்த தகவலின் வாயிலாக பெருத்த லாபத்தை ஈட்டுவது மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமே என்பது தெரிய வந்திருக்கின்றது. ஜிஎஸ்டி 28 சதவீதம், செஸ் வரி 22 சதவீதம், பதிவு, சாலை வரி, பசுமை வரி மற்றும் ஃபாஸ்ட் டேக் ஆகியவற்றின் வாயிலாக அரசு ஆட்டோமொபைல் துறையில் பெரும் தொகை வருவாயை ஈட்டு வருகின்றது.

இத்தகைய வருவாயை ஆட்டோமொபைல்துறை ஈட்டிக் கொடுப்பதனால்தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அது பார்க்கப்படுகின்றது. எனவேதான் அரசும் இந்தியாவில் வாகன உற்பத்தியை பல மடங்கு ஊக்குவித்து வருகின்றது. என்னதான் இந்தியாவில் வாகனங்களின் விலை அதிகரித்தே சென்றாலும், அதற்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்ளது.

டொயோட்டா நிறுவனம் அதன் பிரமாண்ட தோற்றம் கொண்ட ஃபார்ச்சூனர் கார் மாடலை பன்முக தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், இத்தேர்வில் புதிய வேரியண்டை சேர்க்கும் விதமாக மிக சமீபத்தில் புதிய ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் எனும் ட்ரிம்மை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஃபார்ச்சூனர் லெஜண்டர் தேர்வைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஃபார்ச்சூனர் கார் மாடலின் உயர்நிலை தேர்வாக ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் வேரியண்ட் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதன் விலையும் பல மடங்கு அதிகமானதாக காட்சியளிக்கின்றது. அறிமுக விலையாக ரூ. 48.43 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஃபார்ச்சூனர் லெஜண்டர் 4X4 தேர்வைக் காட்டிலும் 3.8 லட்சம் ரூபாய் அதிக விலை இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் தேர்வில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 201 பிஎச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி பல சிறப்பான மற்றும் தரமான புதிய தொழில்நுட்ப வசதிகளையும் புதிய ஃபார்ச்சூனர் தேர்வு பெற்றிருக்கின்றது.
இக்கார்குறித்த முழு விபரங்களையும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








