பெட்ரோல் விலை எவ்ளோ ஏறினாலும் இனி கவலை வேண்டாம்... பெட்ரோல் கார்களை சிஎன்ஜி-ஆக மாற்றி கொள்ள விரைவில் அனுமதி!
பெட்ரோல் கார்களை சிஎன்ஜி-யால் இயங்கும் கார்களாக மாற்றிக் கொள்ள விரைவில் மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சில முக்கிய நகரங்களில் காற்று மாசு பெரும் தலைவலியாக மாற தொடங்கியிருக்கின்றது. ஆகையால் உடனடியாக விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக, பழைய வாகனங்களினால் உருவாகும் மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வருவதில் அரசுகள் அதி-தீவிரம் காண்பித்து வருகின்றன.

அந்தவகையில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடங்கி, பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து வெளியேற்றுவது வரையிலான பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில், பெட்ரோலால் இயங்கும் வாகனங்களை சிஎன்ஜியால் இயங்கும் வாகனமாக மாடிஃபை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, சந்தையில் சிஎன்ஜி கிட்டுகள் தனியாக விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இதனை வாகனங்களில் பொருத்துவதன் வாயிலாக சிஎன்ஜியால் இயங்கும் வாகனமாக பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை மாற்றிக் கொள்ள முடியும். இந்த செயலுக்கே மிக விரைவில் மத்திய அரசு அங்கீகாரம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த ஓர் வரைவை சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் கடந்த வியாழன் அன்று வெளியிட்டிருக்கின்றது. தற்போது பிஎஸ்-4 தர வாகனங்களை மட்டுமே சிஎன்ஜி வாகனங்களாக மாற்ற அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், புதிய வரைவானது அண்மையில் நடைமுறைக்கு வந்த புதிய பிஎஸ்-6 தர வாகனங்களையும் சிஎன்ஜி வாகனமாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்க இருக்கின்றது.

இதன் வாயிலாக 40 சதவீதம் முதல் 50 வரை எரிபொருள் செலவை குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகின்றது. புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி 2020ம் ஆண்டு லாக்-டவுண் காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது. நேரடியாக பிஎஸ்-4 உமிழ்வு விதியில் இருந்து பிஎஸ்-6 நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, கோவிட் வைரசால் இக்கட்டான சூழ்நிலை நிலவி வந்த போதிலும் இந்த உமிழ்வு விதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையிலேயே பிஎஸ்6 தரத்தில் உள்ள பெட்ரோல் வாகனங்களையும் சிஎன்ஜி-யாக மாற்றிக் கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்திருக்கின்றது. 1,500 சிசி திறனுக்கு உட்பட்ட கார்களில் சிஎன்ஜி கிட்டை பொருத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், குறிப்பிட்ட சில எஸ்யூவி கார்கள் உட்பட சிறிய எஞ்ஜினைக் கொண்டிருக்கும் அனைத்து கார்களையும் எதிர்காலத்தில் எந்த தடையும் இன்றி சிஎன்ஜி வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும் என தெரிகின்றது. சிஎன்ஜி கிட்களுடன் மறுசீரமைக்கப்படும் வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகள் செல்லுபடி காலம் வழங்கப்படும்.

இதையடுத்து, அந்த ஒப்புதல் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுபோன்று ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதியை புதுப்பிக்க வேண்டும். காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டும், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு இப்புதிய நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு பதிலாக மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சிகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு மானியம், வரி சலுகை மற்றும் பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை என பல்வேறு சிறப்பு திட்டங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








