இத்தனை எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் போடலாமா? இந்தியாவின் மிகப்பெரிய சார்ஜிங் ஸ்டேஷன் திறப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் (India's Largest Electric Vehicle Charging Station) தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் (Gurgaon) நகரில்தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இந்த மிகப்பெரிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களுக்கு கிட்டத்தட்ட 100 சார்ஜிங் பாயிண்ட்கள் இங்கு இருக்கிறது. 16 AC மற்றும் 4 DC சார்ஜிங் போர்ட்கள் உடன் நவி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் ஸ்டேஷனை விட இது மிகவும் பெரியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். துல்லியமாக சொல்வதென்றால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 96 சார்ஜர்களுடன் குர்கான் சார்ஜிங் ஸ்டேஷன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அலெக்ட்ரிஃபை பிரைவேட் லிமிடெட் (Alektrify Private Limited) என்ற நிறுவனத்தால் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலெக்ட்ரிஃபை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''இந்த பிராந்தியத்தில் எலெக்ட்ரிக் வாகன தொழில்துறையை ஊக்குவிப்பதுடன் மட்டுமல்லாது, எதிர்காலத்தில் இந்தியாவில் அமைக்கப்படும் பெரிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான முன்மாதிரியாகவும் இது அமையும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் என்பது இன்னமும் அரிதான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. அதிலும் இதுபோன்ற மிகப்பெரிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் அரிதிலும் அரிது என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் வரும் காலங்களில் பெட்ரோல் பங்க்குகளை போல் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் நாம் அதிகளவில் பார்க்க முடியும் என்பது உறுதி.

ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும், காற்று மாசுபாடு பிரச்னையை தவிர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய அரசை போல் பல்வேறு மாநில அரசுகளும் மானியங்களை வழங்கி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், காற்று மாசடைந்து வருவதாலும் பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிக அளவில் இல்லாததுதான் அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை சற்று தாமதமாக்கி வருகிறது. இருப்பினும் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால், வரும் காலங்களில் இந்த குறையும் நிவர்த்தி செய்யப்படும் என்பது உறுதி.

அப்போது பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது இன்னும் வேகமாக நடக்கும். தற்போதைய நிலையிலேயே இந்திய சந்தையில் அடிக்கடி எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி கொண்டுதான் உள்ளன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் தற்போது இந்திய சந்தையில் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சில எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களின் அறிமுக நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போது அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு மற்ற பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையும் வரும் காலங்களில் நிச்சயமாக மாறும் என்பது உறுதி.

2030ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை மின்சாரமயமாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவ்வளவு பெரிய நாடு இவ்வளவு குறுகிய காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளும், சீனா போன்ற உலகின் மற்ற பல்வேறு நாடுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறி வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு சிஎன்ஜி கார்களும் தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூட வெகு சமீபத்தில் தனது டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








