தயவு செய்து சீட் பெல்ட் போடுங்க... இத பயன்படுத்தாம இருந்ததால எத்தன உயிர்கள் போயிருக்கு தெரியுமா?
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயங்கர விபத்தில் சிக்கிய சம்பவம் உங்களுக்கு அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் இதுபோல பல லட்சக் கணக்கான விபத்து சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் விபத்து நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சிறு சிறு விபத்துகள் அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யமாலே விடப்படுகின்றன.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் விபத்தின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறி இருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 4,12,432 சாலை விபத்துகள் நாட்டில் அரங்கேறி இருப்பதாக அரசு வெளியிட்ட சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரமாண்ட விபத்து எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக 1,53,972 உயிர்கள் பரிதாபமாக பலியாகி இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, 3,84,448 பேர் மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த மாதிரியான அவலமான நிலையையே ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சாலை போக்குவரத்து விஷயத்தில் சந்தித்து வருகின்றது. அதிகப்படியான உயிர் பலிக்கு முறையாக போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காததே முக்கிய காரணமாக இருக்கின்றது. விபத்து என்பது எதிர்பாராத ஒன்றே. இருப்பினும், இது நடைபெறும் நாம் தப்பிப்பதற்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக அரசு வழங்கியிருக்கும் போக்குவரத்து விதிகளை சரிவர கடைபிடித்தாலே போதும்.
பெரும் விபத்துகளில்கூட பயணிகளால் உயிர் பிழைக்க முடியாது. உதாரணமாக காரில் பயணிக்கும்போது சீட் அணிந்து பயணித்தால், மிகக் கடுமையான விபத்து ஏற்பட்டாலும்கூட சிறு சிறு காயங்களுடன் உயிர் பிழைக்க முடியும். இதைச் செய்ய தவறிய காரணத்தினாலேயே நடப்பாண்டில் பல ஆயிரம் உயிர்கள் பலியாகி இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 16,397 பேர் சீட் பெல்ட் அணியாததன் காரணத்தினால் உயிரிழந்திருக்கின்றனர்.

இதில், அதிக எண்ணிக்கையில் டிரைவர்களே சீட் பெல்ட் அணியாததனால் இறந்திருக்கின்றனர். 8,438 டிரைவர்களும், 7,959 பயணிகளும் சீட் பெல்ட் அணியாததனால் இறந்து உள்ளனர். நம்மில் பலர் டிரைவர் மட்டுமே சீட் பெல்ட் அணிந்தால் போதும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பயணிகள் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், விபத்துகள் தேர்ந்தெடுத்து யாரையும் பாதிப்பிற்கு ஆளாக்குவதில்லை.
மிக சிறந்த உதாரணமே டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்து நிகழ்வு. இவர் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்திருந்தபோதிலும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினார். அவர் பயணித்தது விலை உயர்ந்த பென்ஸ் சொகுசு காராகும். இருப்பினும், விபத்தில் உயிரிழந்தார். இதற்கு அவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே முக்கிய காரணமாக உள்ளது. எனவேதான் சீட் பெல்ட் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகின்றது.

இருப்பினும், பலர் இதை ஓர் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவாக 2021ம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விபத்தில் பலியாகி இருக்கின்றனர். இதேபோல், ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்களின் இறப்பு விகிதமும் மிக அதிகமாக உள்ளது. 'இந்தியாவில் சாலை விபத்துகள் - 2021' எனும் தலைப்பின்கீழ் அரசு வெளியிட்டிருக்கும் தகவலின்கீழ் 46,593 பேர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இருசக்கர வாகனத்தை இயக்கியவர்கள் 32,877 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் 13,716 பேரும் ஹெல்மெட் அணியாததன் காரணத்தினால் இறந்திருக்கின்றனர். இதனால்தான் இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் என அனைவரும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஹெல்மெட் அணியாததால் இறந்தோரின் எண்ணிக்கை மட்டுமல்ல கடுமையான காயங்களுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. 93,763 பேர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதேபோல், சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்த 39,231 பேர் விபத்தின்போது மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதுபோன்ற அவல நிலையில் இருந்து நம்மை காத்துக் கொள்வது நம்முடைய மிகப் பெரிய கடமைகளில் ஒன்று ஆகும். ஆகையால், அனைவரும் இனி வரும் காலங்களில் சீட் பெல்ட் போடுவது, தலைக் கவசம் அணிவது மற்றும் பிற போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பது என அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இதுவே நம்முடைய புத்தாண்டு தீர்மானமாகவும் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








