20 வருஷத்துக்கு மேல ஆச்சு! அம்பாஸிடர் மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச கார்! புதிய அவதாரம் எடுக்கும் மாருதி ஆல்டோ!
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த மாருதி சுஸுகி ஆல்டோ கார் புதிய அவதாரம் எடுக்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் மற்றும் மாருதி 800 ஆகிய தனித்துவமான கார்களின் வரிசையில், மாருதி சுஸுகி ஆல்டோ காரும் இந்தியர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கார்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்திய சந்தையில் கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக, அதாவது கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக, மாருதி சுஸுகி ஆல்டோ கார் விற்பனையில் இருந்து வருகிறது (இந்த காரின் உற்பத்தி பணி கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டது). போட்டி மிகவும் பலமாக இருக்கும் நிலையிலும், மாருதி சுஸுகி ஆல்டோ கார் அதையெல்லாம் எளிதாக சமாளித்து, தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி கொண்டுள்ளது.

அனேகமாக இந்த செய்தியை வாசித்து கொண்டிருக்கும் பலரின் முதல் கார் மாருதி சுஸுகி ஆல்டோவாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிதாக சென்று வருவதற்கு இன்றும் கூட பலர் தினமும் மாருதி சுஸுகி ஆல்டோ காரை பயன்படுத்தி கொண்டிருக்கலாம். பழைய ஆல்டோ காருக்கே இவ்வாறு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், வரும் காலங்களில் ரசிகர்கள் எண்ணிக்கை கூடலாம்.

ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ காரை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது. மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கார் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி (August 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் (Heartect Platform) அடிப்படையில், 2022 ஆல்டோ கார் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ, புதிய செலிரியோ, வேகன் ஆர், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்-6 என மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிறைய பிரபலமான கார்கள் இந்த பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில், இந்த புதிய பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய ஆல்டோ காரை காட்டிலும் புதிய மாடலில், சத்தம் மற்றும் அதிர்வுகள் போன்ற பிரச்னைகள் மிகவும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழைய மாடலை விட, புதிய மாடலின் இன்டீரியர் சற்று அதிக இடவசதியுடன் இருக்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரை, புதிய ஆல்டோ கார், K10C 1.0 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜினை பெறவுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ காரில் மீண்டும் 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனை வழங்கவுள்ளது. சுமார் 2 ஆண்டு கால இடைவெளிக்கு பின் ஆல்டோ கே10 கார் (Alto K10) மீண்டும் விற்பனைக்கு வருகிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது முந்தைய ஆல்டோ கே10 மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. அதனை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. 2022 ஆல்டோ கே10 மாடலுடன், தற்போயை ஆல்டோ (ஆல்டோ 800) காரையும் மாருதி தொடர்ந்து விற்பனை செய்யும்.

இதன்படி K10C 1.0 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் மற்றும் 796 சிசி பெட்ரோல் ஆகிய இன்ஜின் தேர்வுகளில் புதிய ஆல்டோ கார் கிடைக்கும். இதில், புதிய 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 66 பிஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் பழைய 0.8 லிட்டர் இன்ஜின் (796 சிசி) அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனையும் விற்பனை செய்யும். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் மற்றும் அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதி ஆகிய அம்சங்கள் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ காரில் இடம்பெறலாம். அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications