ஹோண்டா சிட்டியில் ஹைப்ரீட் தேர்வு... அறிமுக தேதி அறிவிப்பு!! புதியதாக என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஹோண்டா சிட்டி ஹைப்ரீட் (Honda City Hybrid) காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய பயணிகள் கார்கள் சந்தையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க ஹோண்டா பல வருடங்களாக போராடி வருகிறது. இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து கடைசியாக 2020 ஜூன் மாதத்தில் மிக முக்கிய அறிமுகமாக புதிய தலைமுறை சிட்டி செடான் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி மற்றும் அமேஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரியதாக கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அடுத்ததாக கவர்ச்சிக்கரமான அறிமுகமாக சிட்டி செடான் மாடலில் ஹைப்ரீட் தேர்வு கொண்டுவரப்பட உள்ளது.

2020 நவம்பரில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட சிட்டி ஹைப்ரீட் கார் இந்தியாவிலும் அதனை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட சில காரணங்களினால் இதன் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒருவழியாக 2022 பிப்ரவரியில் இந்த ஹைப்ரீட் செடான் கார் அறிமுகமாகும் என முன்னதாக கூறப்பட்டது.

ஆனால் பிப்ரவரி மாத வருகையும் கொரோனா 3வது அலை பரவலால் தாமதமாகியது. தற்போது இறுதியாக, புதிய சிட்டி ஹைப்ரீட் காரின் அறிமுகம் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்த புதிய ஹைப்ரீட் செடான் கார் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தினத்தில் இந்த காருக்கான முன்பதிவுகளை ஹோண்டா துவங்கலாம்.

ஆனால் டெலிவிரிகள் ஸ்டார்ட் ஆகுவதற்குள் எப்படியிருந்தாலும் 2022 மே மாதம் வந்துவிடும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அறிமுகத்திற்கு பிறகு புதிய சிட்டி ஹைப்ரீட் கார், இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகவும் சில பக்கா ஹைப்ரீட் கார்களுள் ஒன்றாக விளங்கும். சர்வதேச சந்தைகளில் சிட்டி ஹைப்ரீட் காரில் ஹோண்டாவின் ஐ-எம்.எம்.டி (இண்டெலிஜண்ட் மல்டி-மோட் ட்ரைவ்) ஹைப்ரீட் அமைப்பின் சிறிய வெர்சன் வழங்கப்படுகிறது.

இந்த ஹைப்ரீட் பவர்ட்ரெயின் அமைப்பில் ஒரு பெட்ரோல் என்ஜின் மற்றும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் அடங்குகின்றன. இதில் ஒரு மோட்டார் பெட்ரோல் என்ஜின் உடன் இணைந்து ஸ்டார்டர்-ஜெனரேட்டராக செயல்படுகிறது. மற்றொன்று, ஒற்றை, நிலையான-விகித கியர்பாக்ஸ் மூலமாக காரின் முன் சக்கரங்களை இயக்கும் பணியை கவனித்து கொள்ளும்.

இந்த வகையில் புதிய சிட்டி ஹைப்ரீட் காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மறுப்பக்கம் எலக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பின் வாயிலாக ஆற்றலை பெறுகின்றன. எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாகவே அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம்.

எலக்ட்ரிக் மோட்டார் மூலம் கிடைக்கும் இந்த இயக்க ஆற்றலினால் காரின் செயல்படுதிறன் மற்றும் எரிபொருள் திறன் மேம்படும் என்கிறது ஹோண்டா. தாய்லாந்து நாட்டில் விற்பனை செய்யப்படும் சிட்டி ஹைப்ரீட் காரின் மைலேஜ் 27.7kmpl ஆக உள்ளது. சிட்டி செடான் மாடலின் புதிய ஹைப்ரீட் வெர்சன் அதன் டாப் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

இதனால், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, அமேசான் அலெக்ஸா ரிமோட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் இணைப்பு கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றை சிட்டி ஹைப்ரீட் காரில் எதிர்பார்க்கலாம். பின்பக்கத்தில் பேட்டரி தொகுப்புகளை வழங்குவதினால், பொருட்களை வைப்பதற்கான இடவசதி 410 லிட்டர்களில் இருந்து வெறும் 90 லிட்டர்களாக குறைவாக உள்ளன.

எடையை பொறுத்தவரையில், வழக்கமான சிட்டி செடான் காரை காட்டிலும் புதிய ஹைப்ரீட் வேரியண்ட் சுமார் 110 கிலோ வரையில் அதிக எடை கொண்டதாக இருக்கும். புதிய சிட்டி ஹைப்ரீட் காரில் பின்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்குகளும், கூடுதல் பாதுகாப்பிற்கு எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்கும் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








