ஹோண்டா கார்களின் விலை உயர்ந்தது... எவ்ளோ உயர்த்தி இருக்காங்க தெரியுமா?.. முழு விபரம்!
ஹோண்டா நிறுவனத்தின் கார்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடலின் விலை எவ்வளவு வரை உயர்த்தப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

சமீப சில காலமாகவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையுயர்வு பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன. வாகன கட்டுமான செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், செமி கன்டக்டர் சிப் பற்றாக் குறை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, சரக்குக் கொள்கலன்கள் கிடைக்காத காரணம், அதிக கப்பல் கட்டணம் உள்ளிட்ட சில நெருக்கடிகளும் வாகன உற்பத்தியாளர்களை வாட்டி வதைத்து வருகின்றது.

மேலே பார்த்தது இன்னும் சிலவும் சேர்ந்து வாகன உற்பத்தியாளர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டே புதிய வாகனங்களின் விலையை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பல நிறுவனங்கள் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.

அவற்றின் வரிசையில், தனது வாகனங்களின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டதன் வாயிலாக ஹோண்டா நிறுவனமும் இணைந்திருக்கின்றது. ஆம், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, அதன் புதிய கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான அமேஸ், டபிள்யூஆர்-வி மற்றும் சிட்டு உள்ளிட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. இதில், உச்சபட்ச விலை உயர்வை டபிள்யூஆர்-வி காரே பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில் சமீபத்திய அறிமுகமான ஹோண்டா அமேஸ் மாடலுக்கு மிகவும் குறைவான விலை உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா சிட்டி:
ஹோண்டா சிட்டி ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. வி, விஎக்ஸ், மற்றும் இசட்எக்ஸ் ஆகிய தேர்வுகளிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஓர் மிட் சைஸ் செடான் ரக வாகனமாகும். இது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலையில் ரூ. 6,794 வரை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

ஹோண்டா அமேஸ்:
ஹோண்டா அமேஸ் அண்மையில் புதிய அம்சங்களை அப்டேட்டாக பெற்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வான இ வேரியண்டின் விலை மட்டும் மாற்றமின்றி காணப்படுகின்றது. அதேநேரத்தில் எஸ் மற்றும் விஎக்ஸ் தேர்வுகளின் விலை ரூ. 6,500 உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த கார் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி:
ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் அனைத்து தேர்வுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. விஎக்ஸ் எம்டி பெட்ரோல் தேர்வை மற்ற அனைத்து தேர்வுகளின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. ரூ. 6,919 வரை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த கார் எஸ்வி மற்றும் விஎக்ஸ் என இரு விதமான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இவ்வாறே அனைத்து கார் மாடல்களின் விலையையும் ஹோண்டா தற்போது உயர்த்தி இருக்கின்றது. விலையை உயர்த்தி இருக்கும் அதேவேலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது சிறப்பு சலுகையையும் அறிவித்திருக்கின்றது. புதிய ஆண்டில் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ரூ. 35,596 வரை சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா 2050 ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதிலும் தனது மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்கள் மூலமாக ஏற்படக்கூடிய சாலை விபத்துகளை பூஜ்ஜியமாக குறைக்க இப்போதில் இருந்தே பணியாற்ற துவங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஒரு பகுதியாக அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

செயற்கை நுண்ணறிவு வசதிக் கொண்ட அந்த வாகனம் ஓட்டுனர் உதவி இல்லாமல் தானாக இயங்கும் வசதியைப் பெற இருக்கின்றது. இதுமாதிரியான வசதிகளை ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் அறிமுகம் செய்ய ஆரம்பித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையே மிக விரைவில் சிறு சிறு தவறுகளையும் தவிர்க்கும் வகையில் ஹோண்டா தனது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வழங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








