பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தது ஹோண்டா! மாருதி, ஹூண்டாய் எல்லாம் மண்டைய பிச்சுக்க போறாங்க!
இந்திய சந்தையில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு உள்ளது. குறிப்பாக மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். எனவே பல்வேறு நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), எம்ஜி அஸ்டர் (MG Astor), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகியவை இந்த செக்மெண்ட்டிற்கு புது வரவுகள் ஆகும். இவற்றுக்கு முன்னதாக ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. இந்த வரிசையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டாவின் (Honda) கவனமும் தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் மீது அதிரடியாக திரும்பியுள்ளது.

கடுமையான போட்டி நிறைந்த மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரபலமான கார்களுடன், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு போட்டியிடும். ஹோண்டா நிறுவனம் களமிறக்கவுள்ள புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் நீளம் 4.2 மீட்டர்களாக இருக்கலாம்.
இந்தியாவில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து ஹோண்டா சிட்டி (Honda City) காருக்கும், இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகியவைதான் ஹோண்டா நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனினும் இந்த காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இதுதவிர 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும், ஹோண்டா நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இவற்றுடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வரும் பல்வேறு புதிய கார்களில் அடாஸ் வசதி வழங்கப்படுகிறது. இதே செக்மெண்ட்டை சேர்ந்த ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. இதில், அடாஸ் வசதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே ஹோண்டா நிறுவனமும் தனது மிட்-சைஸ் எஸ்யூவி காரில், அடாஸ் வசதியை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிட்டி மற்றும் அமேஸ் (Amaze) போன்ற ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. ஆனால் எதிர்காலத்திலும் விற்பனை சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஹோண்டா நிறுவனத்திற்கு உள்ளது. எனவேதான் இந்த அதிரடி முடிவை ஹோண்டா நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து எதிர்காலத்தில் இந்த காரின் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 சீட்டர் எஸ்யூவி கார்களின் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதும், இந்திய சந்தையில் தற்போது 'ட்ரெண்ட்' ஆகி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயமாக உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








