எலெக்ட்ரிக் வாகனத்தில் உச்சபட்ச ரேஞ்ஜை பெறுவது எப்படி?.. டாடா மோட்டார்ஸ் வழங்கும் தரமான வழிக்காட்டுதல்!
எலெக்ட்ரிக் காரில் ரேஞ்ஜை அதிகரிப்பதற்கான வழிக்காட்டுதல்களை டாடா வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு நெக்ஸான் இவி காரே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியர்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் காராக இது இருக்கின்றது. இந்த கார் நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என இருவிதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இவற்றுடன் சேர்த்து டிகோர் இவி மற்றும் டியாகோ இவி (லேட்டஸ்ட் அறிமுகம்) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் இன்னும் சில எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியிலும் அது களமிறங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான வேலையில், டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார்களில் அதிக தூரம் பயணிப்பது எப்படி என்பதற்கான வழிக்காட்டுதல்களை வழங்கியிருக்கின்றது.
அதாவது, ஓலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெறுவது எப்படி என்பதற்கான டிப்ஸை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிறுவனம் வழிகாட்டியிருக்கும் தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாமா?

எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ஜை அதிகரிப்பதற்கான ஐந்து முக்கியமான காரணிகளையே டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. ஈகோ மற்றும் பிற நார்மலான மோட்களை பயன்படுத்த வேண்டும். வேகத்தை மணிக்கு 80 கிமீ வரையில் மட்டுமே மெயின்டெயின் செய்ய வேண்டும். ஸ்போர்ட் மோடில் பயணிக்கும்போது நல்ல உற்சாகமான அனுபவத்தை எலெக்ட்ரிக் கார் வழங்கும்.

ஆனால், ரேஞ்ஜ் திறன் கடுமையாக பாதிக்கும். ஒன் பெடல் டிரைவிங் மற்றும் லைட் ரைட் ஃபூட் யுக்தியைக் கையாள்வதன் வாயிலாகவும் ரேஞ்ஜை கணிசமாக அதிகரிக்க முடியும் என டாடா தெரிவித்துள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்துவதன் வாயிலாகவும் கணிசமான அளவு ரேஞ்ஜை அதிகரிக்க முடியும்.

இந்த சிஸ்டம் வாகனத்தின் முடுக்கம் அல்லது பிரேக்கிங்கின்போது இயக்க ஆற்றலை மாற்றி மின்சார ஆற்றலாக மாற்றும். இதனை அவ்வப்போது செய்வதன் வாயிலாக கணிசமாக பேட்டரி சார்ஜ் செய்யப்படும். இதன் வாயிலாக ரேஞ்ஜை கணிசமாக மீட்டெடுக்க முடியும்.

ஏசி-யை பயன்படுத்துவதிலும் சிக்கனம் தேவை. உங்கள் வாகனத்தின் ஏர் கண்டிஷனரை 24-26 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தும்போது அதன் மின்சார நுகர்வு கணிசமாக குறையும். இதன் வாயிலாக லேசாக எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை அதிகரிக்க செய்ய முடியும் என டாடா கூறுகின்றது. இதேபோல் டயரில் போதுமான அளவு காற்றை வைத்திருப்பதன் வாயிலாகவும் நல்ல ரேஞ்ஜை எலெக்ட்ரிக் வாகனத்தில் பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகையால், டயர்களில் போதுமான அளவு எப்போது காற்றை வைத்திருப்பது அவசியம். இதைக் கண்கானிக்கவே நவீன கால கார்களில் வாகன உற்பத்தியாளர்கள் டயர் பிரஷ்ஷர் மாணிட்டரை வழங்குகின்றனர். இதேபோல், தேவையில்லாத அல்லது ஆஃப்டர் மார்க்கெட் (அங்கீகரிக்கப்படாத) மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவை அதிகளவில் பேட்டரியின் மின்சார திறனை உறிஞ்சக் கூடும்.

மேலே குறிப்பிட்ட வழிக்காட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக கணிசமான அளவு பேட்டரி ரேஞ்ஜை அதிகரிக்கச் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் அதன் அதிகாரப்பூர்வ வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது டாடா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மின்சார கார் பயன்பாட்டாளர்களுக்கான அறிவுரைகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் மிக சமீபத்தில் உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை பற்றிதான் கூறிக் கொண்டிருக்கின்றோம். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 8.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த குறைவான விலையில் டியாகோ இவி-யை பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








