புதிய கார்களுக்கு சாவி கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஹூண்டாய்... காரணம் என்னனு தெரியுமா?
புதிய கார்களுக்கு சாவி கூட கொடுக்க முடியாத நிலைமைக்கு ஹூண்டாய் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு ஸ்மார்ட் கீ-யை (Smart Key) மட்டுமே வழங்கும் நிலைமைக்கு ஹூண்டாய் நிறுவனம் தற்போது தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது கீ, 6 மாதங்களுக்கு பிறகுதான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இரண்டாவது கீ வழங்கப்பட்டாலும் கூட, அது எந்தவிதமான எலெக்ட்ரானிஸ்களும் (Electronics) இல்லாததாகவே இருக்கும்.

ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முடிவு அதன் அனைத்து கார்களுக்கும் பொருந்தாது. ஹூண்டாய் ஐ20 (அஸ்டா மற்றும் உயர் வேரியண்ட்கள்), ஐ20 என்லைன், க்ரெட்டா (எஸ் மற்றும் உயர் வேரியண்ட்கள்) மற்றும் அல்கஸார் (அனைத்து வேரியண்ட்களும்) ஆகிய மாடல்கள் மட்டுமே இந்த முடிவால் பாதிக்கப்படவுள்ளன.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு செமிகண்டக்டர் (Semiconductor) பற்றாக்குறைதான் காரணமாக உள்ளது. இதுகுறித்து ரஸ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர் பற்றாக்குறையால் ஹூண்டாய் மட்டுமல்லாது, அனைத்து நிறுவனங்களுமே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னை காரணமாக கார்களின் உற்பத்தி சரிவடைந்து வருகிறது.

செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை காரணமாக ஒரு சில நிறுவனங்கள் தங்கள் கார்களில் வழங்கப்பட்டு வந்த வசதிகளின் எண்ணிக்கையை கூட குறைத்துள்ளன. இதனால் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் செமிகண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில், 'இந்தியாவின் 2வது மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்' என்ற பெருமையை சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இழந்தது. நடப்பாண்டு மே மாத கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வழக்கம் போல முதலிடத்தில் தொடர்கிறது.

விட்ட இடத்தை பிடிப்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் வரும் மாதங்களில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களை அப்டேட் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதுடன், பல்வேறு புத்தம் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Venue Facelift) மாடல்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. டாடா நெக்ஸான் கார் சமீப காலமாக ஹூண்டாய் வெனியூ காருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. டாடா நெக்ஸான் விற்பனை அமோகமாக உயர்ந்து வரும் நிலையில், ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை 'டல்' அடிக்கிறது.

இத்தனைக்கும் ஹூண்டாய் வெனியூ கார் பல்வேறு வசதிகளும் நிரம்பிய கார் ஆகும். இந்த காரின் விற்பனையை மீண்டும் உயர்த்துவதற்கு ஏதுவாக, ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. 2022 ஹூண்டாய் வெனியூ கார் வரும் ஜூன் 16ம் தேதி (June 16) விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வெகு சமீபத்தில் ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களின் வடிவில், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கும் சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி அதிகரித்து கொண்டே வரும் நிலையில், செமிகண்டக்டர் பிரச்னையும் ஏற்பட்டுள்ளதால், ஹூண்டாய் நிறுவனம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த பிரச்னையில் இருந்து மீண்டு வருவதற்காக ஹூண்டாய் நிறுவனம் தற்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








