ஹூண்டாய் கார் வாங்க போறீங்களா?.. முதல்ல இந்த விஷயத்த தெரிஞ்சிட்டு போங்க! எல்லாரையும் புலம்ப வைச்சிட்டாங்க!
புதிதாக ஹூண்டாய் (Hyndai) காரை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்நிறுவனம் ஓர் அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அப்படி என்ன நடவடிக்கையை ஹூண்டாய் எடுத்துள்ளது என்பது பற்றி விரிவான தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai) வாகன விற்பனையில் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த நிலையில் லேசான விற்பனை வளர்ச்சியை 2022 ஏப்ரல் மாதத்தில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 2021 ஆம் ஆண்டில் நிறுவனம் விற்பனைச் செய்திருந்த கார் எண்ணிக்கையைக் காட்டிலும் 2022 ஏப்ரலில் அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றது.

நிறுவனம், ஏப்ரல் 2021-இல் 33,854 யூனிட் புதிய வாகனங்களை விற்பனைச் செய்திருந்தநிலையில் 2022 ஏப்ரல் மாதத்தில் 38,076 யூனிட் வாகனங்களை அது விற்பனைச் செய்திருக்கின்றது. இது 12.47 சதவீத அதிக விற்பனையாகும். மார்ச் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் ஆண்டு-டூ-ஆண்டு விற்பனையில் நிறுவனம் கணிசமான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில், சற்றே ஆதரவளிக்கும் வகையில் இந்த விற்பனை வளர்ச்சி அமைந்துள்ளது.

அதேநேரத்தில், 2022 ஏப்ரல் விற்பனையானது 2022 மார்ச் விற்பனையைக் காட்டிலும் 6.14 சதவீதம் குறைவு என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, நடந்து முடிந்த மார்ச் மாதத்தில் 40,567 யூனிட் ஹூண்டாய் கார்கள் விற்பனையாகியிருந்த, நிலையில் சென்ற மாதம் 38,076 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகியிருக்கின்றது.

இவ்வாறு நிறுவனம் விற்பனையில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகின்ற சூழ்நிலையில் ஹூண்டாய் அதன் முன்னணி கார் மாடல்கள் சிலவற்றின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வென்யூ (Venue), க்ரெட்டா (Creta) மற்றும் அல்கஸார் (Alcazar) ஆகிய எஸ்யூவி கார் மாடல்களின் விலையையே நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது.

ரூ. 27 ஆயிரம் வரையில் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் டொயோட்டா, மாருதி சுஸுகி, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன. இந்த நிறுவனங்களின் பட்டியலிலேயே தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸும் இணைந்திருக்கின்றது.

அதாவது, விலை உயர்வின் வாயிலாக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிறுவனங்களின் பட்டியலில் ஹூண்டாயும் தற்போது இணைந்திருக்கின்றது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், வென்யூவின் டீசல் எஸ்எக்ஸ் எம்டி வேரியண்டின் விலை ஏற்றப்படவில்லை. இதுபோல் இன்னும் சில தேர்வுகளின் விலையை ஹூண்டாய் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய விலை உயர்வால் வென்யூவின் டீசல் எஸ்எக்ஸ் எம்டி வேரியண்டை தவிர மற்ற அனைத்தின் விலையும் ரூ. 12 ஆயிரம் அதிகரித்துள்ளது. மேலும், விலை உயர்வால் தற்போது இக்காரின் ஆரம்ப விலையே ரூ. 7.11 லட்சமாக மாறியுள்ளது. இக்கார் மாடல் உச்சபட்சமாக ரூ. 11.83 லட்சம் வரையில் விற்பனைச் செய்யப்படுகின்றது.

இதேபோல், க்ரெட்டாவின் விலையிலும் ரூ. 27 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், இதன் பெட்ரோல் எஸ் எம்டி ட்ரிம்மின் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையிலேயே விற்கப்படுகின்றது. அல்கஸார் எஸ்யூவி கார் மாடலின் விலையில் ரூ. 10,100 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கார் மாடலின் சிக்னேச்சர் (ஓ) ட்யூவல் டோன் 6 சீட்டர் மற்றும் அனைத்து டீசல் தேர்வு சிக்னேச்சர் (ஓ) ட்ரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை.

ஹூண்டாய் நிறுவனத்தின் விலை ஏற்றம் செயல் நாட்டு மக்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக நிறுவனத்தின் புதிய வாகனத்தை வாங்க திட்டம் போட்டிருந்தவர்களை விலையேற்றம் பெரிதாக பாதிக்கச் செய்திருக்கின்றது. அவர்களை புலம்பவே செய்ய வைத்துள்ளது என கூறலாம். ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், புதிய வாகனங்களின் விலையும் உயர்ந்து வருவது, அவற்றை வாங்குவதை சிக்கலாக்கும் வகையில் அமைகின்றது. மேலும், புதிய வாகன கனவை கனவாகவே மாற்றுவிடும் வகையிலும் அவை அமைகின்றன. வாகன உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதே புதிய வாகனங்களின் விலையுயர்விற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








