வேற வழி இல்ல... ஹூண்டாய் நிறுவனம் எடுத்த திடீர் முடிவு... அதிர்ச்சியில் உறைந்து போன வாடிக்கையாளர்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்து வரும் 2வது நிறுவனம் என்ற பெருமையை ஹூண்டாய் தன்வசம் வைத்துள்ளது.
இந்த சூழலில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலைகளை உயர்த்த போகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலைகளும் உயரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே, கார்களின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ''உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதை ஹூண்டாய் தொடர்ந்து தாங்கி கொண்டு வந்தது. ஆனால் கார்களின் விலைகளில் மாற்றம் செய்வதன் மூலம் இதன் ஒரு பகுதியை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு கடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது'' என ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு கார் நிறுவனங்களும் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே புத்தாண்டிற்கு புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது புதிதாக ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா (Hyundai Kona) எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) என்ற எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இது இந்திய சந்தைக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது.
இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 58 kWh மற்றும் 72.8 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த 2 பேட்டரி ஆப்ஷன் மாடல்களுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா? அல்லது ஏதாவது ஒரு பேட்டரி ஆப்ஷன் மாடல் மட்டும் அறிமுகம் செய்யப்படுமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கியா இவி6 (Kia EV6) மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருடன், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift) மாடலும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் க்ரெட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலின் வருகை, கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








