மீண்டும் டாடாவை முந்தி 2வது இடத்திற்கு வந்த ஹூண்டாய்!! கார்கள் விற்பனையில் பலத்த போட்டி!
இந்திய பயணிகள் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் தனது 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் மிக பெரிய பயணிகள் கார்களுக்கான சந்தை என்று பார்த்தால், அதில் நிச்சயம் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் புதியதாக கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திய சந்தையில் பயணிகள் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி கடந்த பல வருடங்களாக முதலிடம் வகித்துவர, 2வது இடத்திலும் நீண்ட காலமாக தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நீடித்துவந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனையில் ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இன்னும் சொல்ல போனால், கடந்த மாதங்களில் சிலமுறை ஹூண்டாயை முந்திக்கொண்டு டாடா மோட்டார்ஸ் 2வது இடத்திற்கு வந்தது. கடந்த 2022 மே மாதத்தில் கூட 42,293 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனை காட்டிலும் ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக 43,341 கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் 2வது இடத்திற்கு வந்தது.

ஆனால் கடந்த 2022 ஜூன் மாத விற்பனையில் மீண்டும் ஹூண்டாய் மோட்டார்ஸ் தனது 2வது இடத்தை மீட்டெடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 49,001 யூனிட் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது டாடா மோட்டார்ஸுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 4 ஆயிரம் யூனிட்கள் அதிகமாகும். ஏனெனில் கடந்த மாதத்தில் 45,197 டாடா கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் கார்கள் விற்பனையில், ஹூண்டாய் மோட்டார்ஸின் கடந்த கால சரிவிற்கு உலகளவில் ஏற்பட்ட குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். இந்த தவிர்க்க முடியாத பிரச்சனையினால் இந்தியாவின் நம்பர்.01 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கூட பல இன்னல்களை சந்தித்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் அந்த சூழலை சாமர்த்தியமாக கையாண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கு டாடா பிராண்டில் இருந்து தொடர்ச்சியாக களமிறக்கப்பட்ட புதிய கார்களின் அறிமுகங்களே சாட்சியாகும். இவ்வாறான புதிய அறிமுகங்கள் டாடா மோட்டார்ஸுக்கு பெரிய அளவில் விற்பனையில் உதவி புரிந்தது என்பது மறுக்க முடியாத உண்மையே. இதுகுறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்த்ரா, சீனாவில் ஊரடங்கினால் விநியோக சங்கிலியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இருந்தது.

இருப்பினும், 2022-23 நிதியாண்டின் கடந்த முதல் காலாண்டிலும் (ஏப்ரல்-ஜூன்) பயணிகள் கார்கள் விற்பனைக்கு நல்ல தேவை நிலவி வருவதாக கூறியிருந்தார். சீனாவில் கிட்டத்தட்ட 3 மாதங்களாக கடுமையாக பின்பற்றப்பட்ட ஊரடங்கில் சில தினங்களுக்கு முன்னர்தான் சற்று தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும் அந்த தளர்வுகளும் உள்நாட்டுவாசிகளுக்கு தானே தவிர்த்து, வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்கின்றன.

மீண்டும் 2வது இடத்திற்கு முன்னேறியிருப்பது குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் தருண் கார்க் பேசுகையில், "விற்பனை எண்ணிக்கைகள் மீண்டும் நேர்மறையாக பதிவாக ஆரம்பித்துள்ளன. இது குறைக்கடத்திகள் பற்றாக்குறை சூழல் சீராகி வருவதை வெளிக்காட்டுவதாக உள்ளது" என கூறியவர், சமீபத்திய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஹூண்டாய் & டாடா மோட்டார்ஸ் என இரு நிறுவனங்களும் தங்களது பயணிகள் கார்களுக்கு நல்லப்படியான தேவை நிலவி வருவதாக கூறிவருவதால், இவை இரண்டிற்கும் இடையேயான போட்டி வரும் மாதங்களுக்கும் நீடிக்கும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெருகிவரும் தேவையை அறிந்து எலக்ட்ரிக் வாகன சந்தையிலும் இந்த நிறுவனங்கள் தங்களை விரிவுப்படுத்தி கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

அப்படியே நம்பர்.01 கார் மேக்கர் மாருதி சுஸுகிக்கு வந்தால், இந்த நிறுவனத்தின் கார்கள் மட்டும் லட்சங்களில் ஒவ்வொரு மாதத்திலும் விற்பனையாகுகின்றன. கடந்த 2022 ஜூன் மாதத்தில் கூட மொத்தம் 122,685 மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,800 யூனிட்கள் குறைவாகும்.


Click it and Unblock the Notifications








