ஹூண்டாய் கார்களின் விற்பனையில் முன்னேற்றம்... இனி இன்னும் அதிகம் ஆகப்போகுது!
ஹூண்டாய் கார்களின் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 33,087 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 49,700 ஆக உயர்ந்துள்ளது. இது 50.2 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனையில் மட்டுமல்லாது, ஏற்றுமதியிலும் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 12,704 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 13,501 ஆக உயர்ந்துள்ளது. இது 6.3 சதவீத வளர்ச்சியாகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 45,791 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 63,201 ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் வெனியூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து வெனியூ காரின் என் லைன் மாடலையும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

12.16 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) ஹூண்டாய் வெனியூ என் லைன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. N6 மற்றும் N8 என 2 வேரியண்ட்களில், ஹூண்டாய் வெனியூ என் லைன் கார் கிடைக்கும். இந்த 2 வேரியண்ட்களுமே ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் நிறுவனம் இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதில், க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் நடப்பாண்டு இறுதிக்குள்ளாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கோனா எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர ஐயோனிக்5 எலெக்ட்ரிக் காரையும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பல்வேறு புதிய மாடல்கள் வரவுள்ளதால், வரும் மாதங்களில் ஹூண்டாய் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட கார்கள் தவிர, வெர்னா காரின் புதிய தலைமுறை மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் மாதங்களில் போட்டி நிறுவனங்களுக்கு ஹூண்டாய் கடுமையான சவாலை ஏற்படுத்த போகிறது என்பது உறுதி.

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடிப்பதற்கு தற்போது ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டுள்ளது. எனவே இந்த 2 நிறுவனங்களுமே தற்போது மிகவும் தீவிரமாக பணியாற்ற தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications