வெறும் 2 இருக்கைகள் மட்டுமே, ஹூண்டாய் காஸ்பரின் வேன் வெர்சன்!! மைக்ரோ-எஸ்யூவியில் இவ்வளவு பெரிய கார்கோ பகுதியா
சுமார் 940 லிட்டர் கொள்ளளவுடன் ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி காரின் வேன் வெர்சன் தென்கொரிய நாட்டு சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹூண்டாய் தயாரிப்பை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்கொரியாவில் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஹூண்டாய் மோட்டார்ஸ் காஸ்பர் என்ற அதன் புதிய மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகம் செய்திருந்தது. மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதினால் ஆரம்பத்திலேயே இந்த அளவில் சிறிய எஸ்யூவி காருக்கு வரவேற்பு குவிய ஆரம்பித்தது.

எந்த அளவிற்கு என்றால், காஸ்பருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட 24 மணிநேரத்திலேயே 12,000-ஐ கடந்தது. இந்த உடனடி பலத்த வரவேற்பே ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தை காஸ்பரின் வேன் வெர்சனையும் தயாரித்து, அறிமுகம் செய்ய வைத்துள்ளது. வேன் வெர்சன் என்பதால் வாகனத்தின் உள்ளே 4 இருக்கைகளுக்கு பதிலாக இரு இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

பின் இருக்கை வரிசை நீக்கப்பட்டு, அந்த பகுதி பொருட்களை வைத்து செல்லும் பகுதியாக மாறியுள்ளது. இதன் மூலமாக வாகனத்தின் கார்கோ பகுதி சுமார் 940 லிட்டர்கள் கொள்ளளவிற்கு அதிகரித்துள்ளது. இதனை தவிர்த்து வழக்கமான காஸ்பருக்கும், இந்த வேன் வெர்சனுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக வாகனத்தின் வெளிப்பக்கம் முழுவதுமாக காஸ்பர் மைக்ரோ-எஸ்யூவி காரையே ஒத்து காணப்படுகிறது.

ஹூண்டாய் காஸ்பர் மைக்ரோ-எஸ்யூவி காரின் மொத்த நீளமே 3,595மிமீ ஆகும். இந்த புதிய வேன் வெர்சனின் பின்பக்கத்தில் கூடுதல் பாதுகாப்பிற்கு உலோக பார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பார்களை சிறு சிறு துண்டுகளாக பின்பக்க கண்ணாடியிலும் பார்க்க முடிகிறது. தென்கொரியாவில் விலையை பொறுத்தவரையில், காஸ்பர் காரினையே புதிய வேன் வெர்சனும் ஒத்து காணப்படுகிறது.

காஸ்பர் வேன் வாகனத்தின் விலை அந்த நாட்டில் 13,850,000 வொன் -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8.64 லட்சமாகும். ஸ்மார்ட் என்கிற ஒரே ஒரு ட்ரிம் நிலையில் மட்டுமே காஸ்பரின் புதிய வேன் வெர்சன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மிக முக்கிய அம்சமாக அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் காஸ்பர் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களில் வாகனம் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாகுவதை தடுக்கும் உதவி, ஒரே பாதையை தொடர உதவி, ஹை பீம் உதவி மற்றும் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்தியாவில் சற்று விலைமிக்க எஸ்யூவி கார்களிலேயே இந்த பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன.

ஆனால் தென்கொரியாவில் ஹூண்டாய் காஸ்பர் போன்ற சிறிய அளவிலான கார்களில் கூட கொண்டுவரப்படுகிறது என்பதில் இருந்து, அந்த நாட்டின் வாகன பாதுகாப்பு விதிமுறைகளை அறிய முடிகிறது. இவற்றுடன் வாகனத்தின் உட்புற லெதர் இருக்கை அமைப்பு, மடக்கும் வசதி கொண்ட & கதகதப்பான இருக்கைகள், ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் வித்தியாசமான முன் பம்பர் போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் தேர்வுகளாக பெறலாம்.

மேலும் இந்த வேனிற்கான ஆக்ஸஸரீகளில் உலோக மேற்கூரையும் அடங்குகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு காஸ்பரின் புதிய வேன் வெர்சனில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 75 எச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதனுடன் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இது என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் காஸ்பர் மைக்ரோ-எஸ்யூவி கார் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கான சந்தை தற்போது ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது. இந்த பிரிவில் இப்போதைக்கு டாடா பஞ்ச் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா காரான பஞ்ச் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.65 லட்சங்களில் இருந்து ரூ.9.29 லட்சங்கள் வரையில் உள்ளன. ப்யூர், அட்வென்ச்சர், அக்கம்பிளிஷ்டு மற்றும் கிரியேட்டிவ் என்கிற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள டாடா பஞ்ச் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








