கடுப்பான வாடிக்கையாளர்கள்... டாடா இப்படி செய்யும்ணு கொஞ்சம் கூட எதிர்பாக்கல... அதுவும் பாதுகாப்பான கார்லயா!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ள காரியத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் டாடா நிறுவனம் பன்ச் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா பன்ச் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கி, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. இதுதவிர பன்ச் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏராளமான வசதிகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் இந்த காரின் டிசைனும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கிறது.

மேலும் பன்ச் காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சரியான விலையையும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 5.93 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் டாடா பன்ச் காருடைய டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா பன்ச் காரின் வெற்றிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழலில், பன்ச் காரின் வசதிகள் பட்டியலில் தற்போது டாடா நிறுவனம் மாற்றத்தை செய்துள்ளது. டாடா பன்ச் காரில், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் (Idle Start/Stop) வசதி முதலில் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் அக்காம்ப்ளீஸ்டு (Accomplished) மற்றும் க்ரியேட்டிவ் (Creative) வேரியண்ட்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.

தற்போதைய நிலையில் டாடா பன்ச் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ப்யூர் (Pure), அட்வென்ஜர் (Adventure) மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அக்காம்ப்ளீஸ்டு, க்ரியேட்டிவ் வேரியண்ட்கள் ஆகும். இதில், ப்யூர் மற்றும் அட்வென்ஜர் வேரியண்ட்களில் இருந்து ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி நீக்கப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் டாடா பன்ச் காரின் அக்காம்ப்ளீஸ்டு மற்றும் க்ரியேட்டிவ் வேரியண்ட்களில் மட்டும்தான் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியை பெற முடியும். ஆனால் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தவிர, பன்ச் காரில் இருந்து வேறு எந்தவொரு வசதியையும் டாடா நிறுவனம் நீக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் போன்ற மற்ற வசதிகள் அனைத்தும் டாடா பன்ச் காரில், வாடிக்கையாளர்களுக்கு முன்பு போலவே தொடர்ந்து வழங்கப்படும்.

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் தனது நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய 3 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்குள் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கலாம்.

அதற்கு முன்னதாக அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், தனது ஆதிக்கத்தை வலுவாக்கி கொள்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








