டஃப் குடுக்க ரெடியாகும் மாருதி, டொயோட்டா... ஒரு கை பார்த்து விடும் முடிவில் அதிரடி திட்டத்தை வகுத்த கியா!
போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், கியா நிறுவனம் அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் இந்தியாவில் நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

அத்துடன் கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் கார்களில் கியா செல்டோஸ் மிகவும் முக்கியமானது.

ஆனால் சமீப காலமாக கியா செல்டோஸ் காருக்கு போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்கள் இந்த செக்மெண்ட்டில் புதிதாக களமிறங்கியுள்ள நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.

இந்த 2 கார்களும் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி போட்டி அதிகரித்து கொண்டே செல்வதால், அதனை சமாளிக்கும் வகையில், அப்டேட் செய்யப்பட்ட புதிய செல்டோஸ் காரை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன் பகுதி மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி அப்டேட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், புதிய முன் பக்க பம்பர் ஆகியவை வழங்கப்படலாம். இதுதவிர புதிதாக டிசைன் செய்யப்பட்ட எல்இடி பகல் நேர விளக்குகள், ஷார்ப் ஆன எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவையும் வழங்கப்படலாம்.

அத்துடன் புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தற்போது விற்பனையில் இருக்கும் மாடலை விட, செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இன்னும் அழகானதாகவும், கம்பீரமானதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய கியா செல்டோஸ் காரின் அளவில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் லேட்டஸ்ட் கியா கனெக்ட் ஆகியவை வழங்கப்படலாம். மேலும் அடாஸ் அடிப்படையிலான வசதிகள், 6 ஏர்பேக்குகள் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படவுள்ளன. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த காராக இருக்கும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே நேரத்தில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்னதாக சொனெட் காரின் எக்ஸ் லைன் மாடலை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் எக்ஸ் லைன் மாடல் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








