நாட்டிலேயே முதல் முறையாக ராணுவ வீரர்கள் டிரைவர்களாக வருகிறார்கள்... அப்போ பாதுகாப்பாக பயணிக்கலாம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களைக் கொண்டு கால் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கால் டாக்சி நிறுவனங்களுக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றது. இருப்பினும் இந்த பிரிவில் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களே நாட்டில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் அதன் கால் டாக்சி சேவையில் சாதாரண குடிமக்களையே பார்ட்னர்களாக பயன்படுத்தி வருகின்றது.

இதனையே சற்று வித்தியாசமாக கையாண்டிருக்கின்றது எலெக்ட்ரா இவி என்றழைக்கப்படும் எலெக்ட்ரோ டிரைவ் பவர்டிரெயின் செல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Electrodrive Powertrain Solutions Private Limited) எனும் நிறுவனம். இந்நிறுவனமும் ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் (ராணுவ வீரர்களை) இணைந்து கால் டாக்சி சேவையை வழங்க இருக்கின்றனர்.

சாய்னிக் பாட் சிட் அண்ட் கோ (SainikPod Sit & Go) எனும் பெயரில் இந்த கால் டாக்சி சேவை நிறுவனம் இயங்க இருக்கின்றது. சாய்னிக் என்பதன் பொருள் சிப்பாய் என்பதாகும். இந்த சேவைக்காக நிறுவனம் நூறு மின்சார கார்களை தயார் செய்திருக்கின்றது.
டாடா டிகோர் இவி மற்றும் மின்சார காராக மாற்றப்பட்ட டாடா நானோ (நியோ இவி என்று இது குறிப்பிடப்படுகின்றது) ஆகிய கார்களையே நிறுவனம் இந்த சேவையில் பயன்படுத்த இருக்கின்றது. இந்த மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது ஆகும்.

இதேபோல், முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவியாக இருப்பார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பெண் பயணிகளுக்கு இந்த கால் டாக்சி நிறுவனம் அதிக பாதுகாப்பை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சேவையை நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றது.

ஓய்விற்கு பின்னர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கண்ணியமான பணியை வழங்க இது உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கால் டாக்சியும் நிறுவனமும் வழக்கமான கால் டாக்சி சேவையை போலவே நாட்டில் செயல்பட இருக்கின்றது.

இணையத்தின் வாயிலாக இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேவேலையில் இணையத்தை பயன்படுத்த முடியாத சூழலில் அழைப்பின் வாயிலாகவும் ரைடை புக் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பிரத்யேகமாக சாய்னிக் பாட் எனும் வாகன நிறுத்துமிடம் பெங்களூரு மெட்ரோ ரியல் நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கின்றது.

மெட்ரோ ரயில் பயணிகள் எளிதில் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரூ. 25 மற்றும் ரூ. 15 ஒரு கிமீட்டருக்கு கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. இத்துடன், மெம்பர்ஷிப் திட்டமும் வழங்கப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது கோவிட் வைரஸ் அச்சம் நிலவுவதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இச்சேவை வழங்கப்படும் எனவும் நிறுவனம் கூறியிருக்கின்றது.

நிறுவனம் ஏற்கனவே பெங்களூரு மெட்ரோவுடன் கூட்டிணைந்திருக்கின்றது. இத்துடன், கேப்ஜெமினி, விப்ரோ மற்றும் ஐபிஎம் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களுடனும் இணைந்திருக்கின்றது. சிறந்த மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் இந்த சாய்னிக்பாட் வாடகை வாகன சேவை வழங்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து தனது சேவையை முக்கிய வர்த்தக மையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் தொடங்க சாய்னிக்பாட் சிட் அண்ட் கோ திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மின் வாகனங்களுக்கான தனது சொந்த சார்ஜிங் மையங்களை உருவாக்கும் எண்ணமும் இருப்பதாக அது கூறியிருக்கின்றது.
குறிப்பு: இந்த செய்தியில் சில படங்கள் உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








