இந்தியாவின் முதல் மாருதி 800 காரா இது... புதுசுபோல மாத்திட்டாங்க... நமக்கே இந்த காரை இப்ப வாங்கணும்போல தோணுது!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கை வண்ணத்தில் இந்தியாவின் முதல் மாருதி 800 (Maruti 800) கார் அண்மையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய கார்போல் மாறியிருக்கின்றது.
இந்த வாகனம்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திய கார் மாடலே மாருதி 800 (Maruti 800). இப்போதும் இந்த காருக்கு ஃபேன் பட்டாளம் உண்டு. பலரின் மறக்க முடியாத வாகனமாகவும் இது இருக்கின்றது. இந்த ஹேட்ச்பேக் காரை 1983 ஆம் ஆண்டிலேயே இந்தியாவைச் சேர்ந்த மாருதி நிறுவனமும், ஜப்பான நாட்டைச் சேர்ந்த சுஸுகி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தின.

பலரால் நுகரக் கூடிய குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆகையால், இந்தியர்கள் பலரின் பிரியமான காராக அது மாறியது. இதுமட்டுமில்லைங்க பலருடைய முதல் காராகவும் மாருதி 800 உருவெடுத்தது. இத்தகைய சூப்பரான கார் மாடலே அண்மையில் 39 ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதல் மாருதி 800 காரை மாருதி நிர்வாகம் சிறப்பித்து வெளியிட்டிருக்கின்றது.

நிறுவனம் இந்தியாவின் முதல் மாருதி 800 காரை புதிதுபோல் மாற்றி அதனை அதன் தலைமையகத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றது. நிறுவனத்தின் கை வண்ணத்தால் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்ப்டட மாருதி 800 காரைபோல் அவ்வாகனம் மாறியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அண்மையில் தயாரிக்கப்பட்ட புதிய காரைபோல் இந்தியாவின் முதல் மாருதி 800 தற்போது மாறியுள்ளது.

அதேநேரத்தில் அதன் விண்டேஜ் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் எனும் பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 800 கார் உற்பத்தியின்போது 'மாருதி உத்யோக் லிமிடெட்' (Maruti Udyog Limited) எனும் பெயரிலேயே செயல்பட்டு வந்தது. இக்காரின் உற்பத்தி பணிகள் ஹர்யானா மாநிலத்தில் உள்ள ஆலையில் வைத்தே மேற்கொள்ளப்பட்டது.

அங்கு வைத்து தயாரிக்கப்பட்டதே தற்போது புத்துயிரைப் பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் மாருதி 800 கார். ஹர்பல் சிங் என்பவரே இதன் உரிமையாளர் ஆவார். பலர் இக்காரை வாங்க முன் வந்த நிலையில் டெல்லியின் தென் பகுதியில் உள்ள கிரீன் பார்க்கில் வசித்து வந்த ஹர்பல் சிங்கிற்கு முதல் யூனிட் மாருதி 800 காரை பெறும் வாய்ப்பு கிடைத்தது. தேசத்தின் முதல் தயாரிப்பு என்பதால் கார்களை வாடிக்கையாளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவிழாவைப்போல் கோலகமாகக் கொண்டாடப்பட்டது.

மேலும், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியே முதல் மாருதி 800 காருக்கான சாவியை வழங்கினார். ஆகையால், பல நிலைகளில் சிறப்பு வாய்ந்த காராக இந்தியாவின் முதல் மாருதி 800 காட்சியளிக்கின்றது. டிஐஏ 6479 எனும் பதிவெண் கொண்ட அக்காரை ஹர்பல் சிங் அவர் இறக்கும் வரை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரின் இறப்பிற்கு பின்னரே அக்கார் பயன்படுத்தப்படாமல் கை விடப்பட்டிருக்கின்றது.

வெகு நாட்களாக பயன்படுத்தப்படாத காரணத்தினால் துருவிற்கும் அக்கார் இரையாகத் தொடங்கியது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி நிர்வாகத்தின் கண்களில் இந்த அரிய கார்குறித்த படங்கள் தென்பட்டிருக்கின்றன. இதனை அடுத்தே அவ்வாகனத்தை புதுப்பிக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறங்கியது.

தற்போது முழுமையாக புத்துயிரும் அளிக்கப்பட்டுவிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மாருதி நிறுவனம் புதிதுபோல் மாற்றப்பட்டிருக்கும் மாருதி 800 காரின் படங்களை வெளியிட்டிருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் மாருதி 800 காரை எஸ்எஸ்80 எனும் பெயரிலும் அழைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாகனத்தில் 3 சிலிண்டர் கார்பரேட்டட் 796 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டாரையே நாளடைவில் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதியுடன் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற அந்தஸ்தை பல வருடங்களாக சூடி வந்த கார் என மாருதி 800-ஐ கூறலாம். இதுமட்டுமில்லைங்க, நாட்டில் பல ஆண்டு காலமாக தயாரிப்பில் இருந்த 2வது காராகவும் மாருதி 800 இருக்கின்றது. ஸ்டைல், செயல்திறன், நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்கள் மத்தியில் பேராதரவை இக்கார் பெற்றது.

மாருதி 800 கார் மாடலைத் தொடர்ந்து நிறுவனம் ஆல்டோ 800 காரையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த கார் மாடலுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் பேராதரவும், வரவேற்பும் கிடைத்தது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான யூனிட்டுகள் விற்பனையாகும் அளவிற்கு அதற்கு வரவேற்பு நிலவியது.


Click it and Unblock the Notifications