விரைவில்... இந்தியாவில் விற்கப்படும் கார்களின் பாதுகாப்பு தரத்தை ஆராய அறிமுகமாகிறது பாரத் என்சிஏபி!
கார்களின் தரத்தையும், பாதுகாப்பு திறனையும் ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலேயே புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

குளோபல் என்சிஏபி மற்றும் ஐரோப்பிய என்சிஏபி போன்று இந்தியாவிற்கெனப் பிரத்யேகமாக 'பாரத் என்சிஏபி' மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன உலகின் பல ஆண்டு கனவாக இது இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே மிக விரைவில் இது உண்மையாகிவிடும் என்கிற தகவல் வெளி வந்திருக்கின்றது.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்த தகவலை உறுதி செய்தார். தொடர்ந்து பேசிய அவர், "பாரத் என்சிஏபி-க்கான காலக் கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேவேலையில், மிகக் கடுமையான விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்படும்" என்றார்.

மேலும், 12 புள்ளிகளின் அடிப்படையில் வாகனங்களின் தரம் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் விற்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மிக விரைவில் அனைத்து வாகனங்களிலும் ஆறு ஏர் பேக்குகள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, பின் இருக்கையின் நடு பகுதியில் அமர்பவர்களுக்கு மும்முனை கொண்ட சீட் பெல்டை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான கார்களின் முன் மற்றும் பின் பகுதியில் உள்ள ஜன்னல் இருக்கைகளுக்கு மட்டுமே இந்த சீட் பெல்ட் வசதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஆகையால், பின் இருக்கையின் நடுவில் அமர்பவர்களுக்கு லேசான ஆபத்தான சூழல் நிலவுகின்றது. இதனைக் களையும் பொருட்டே மத்திய அரசு மிக விரைவில் 'Y' ரக மும்முனை சீட் பெல்டை கட்டாயமாக்க இருக்கின்றது. இதேபோல், இஎஸ்சி எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (electronic stability control), அட்வான்ஸ்ட் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் (advanced emergency braking system) மற்றும் டிரைவர் தூங்கினால் அதனைக் கண்டறியும் கருவி என பன்முக அம்சங்களை அரசு கட்டாயமாக்க இருக்கின்றது.

இதில், ஆறு ஏர் பேக் அம்சமே மிக விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்றது. வரும் அக்டோபர் 1ம் தேதி அது முதல் அமலுக்குக் வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதியதாக இன்னும் சில அம்சங்களைக் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அடாஸ் எனும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டத்தை (advanced driver assistance system)-யும் அரசு கட்டாயமாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அம்சமானது லேன் டிபார்ச்சர் வார்னிங், டிரைவரின் கவனம் சிதறும்போது எச்சரித்தல் மற்றும் முன் பக்கத்தில் மோதுவது போன்று ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் அதனை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரித்தல் உள்ளிட்டவற்றை செய்யும். ஆகையால், மிக சூப்பரான பாதுகாப்பு அம்சமாக இது பார்க்கப்படுகின்றது. இந்த அம்சம் இருக்கும் கார்கள் பெரும்பாலும் விபத்தைச் சந்திக்காது. மேலும், அதிக பாதுகாப்பான வாகனமாகவும் அது செயல்படும்.

இதுபோன்று பயணிகளின் பாதுகாப்பை அதிகம் உறுதிப்படுத்தும் அம்சங்களை நடைமுறைகுக் கொண்டு வரும் முயற்சியிலேயே மத்திய அரசு களமிறங்கியிருக்கின்றது. இத்துடன், இந்தியாவிற்கென சொந்த க்ராஷ் டெஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியிலும் அது ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது.

லத்தீன் என்சிஏபி மற்றும் யூரோ என்சிஏபி இவையே உலகின் மிகவும் கடுமையான கிராஷ் டெஸ்ட் விதிகளைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. குளோபல் என்சிஏபி-யைக் காட்டிலும் அவை அதிக விதிகளைக் கொண்டவை என கூறப்படுகின்றது. உதராணமாக லத்தின் என்சிஏபி-யில் ஓர் கார் அதிக புள்ளிகளை பெற வேண்டும் எனில், அந்த கார் இஎஸ்சி, தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன் மற்றும் ஸ்பீடு அசிஸ்டன்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

குளோபல் என்சிஏபி-யில் முன் பக்க கிராஷ் டெஸ்ட் மட்டுமே செய்யப்படுகிறது. அதேவேலையில், லத்தின் மற்றும் யூரோ என்சிஏபி-யில் பக்கவாட்டு பகுதி மோதல், மீட்பு மற்றும் வெளியேற்ற சோதனை என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகள் மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற மிகக் கடுமையான விதிகளுடனேயே பாரத் என்சிஏபி-யும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றுவது அதன் விலையை பன் மடங்கு உயர்த்த வழி வகுக்கும். ஆகையால், அரசின் கட்டாய பாதுகாப்பு அம்சங்களால் புதிய வாகனங்களின் விலையை மிக அதிகமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது இந்திய சந்தையில் மிக அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராக டாடா பஞ்ச் இருக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக 66 புள்ளிகளுக்கு 57.34 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. மேலும், பெரியவர்களின் பாதுகாப்பில் ஐந்திற்கு 5 ஸ்டார்களையும், சிறுவர்களின் பாதுகாப்பு ரேட்டிங்கில் 5க்கு நான்கு நட்சத்திர ரேட்டிகையும் பெற்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








