மெரிடியன் எனும் பெயரில் விரைவில் வருகிறது மேட்-இன்-இந்தியா ஜீப் 7 சீட்டர் கார்... அதிகாரப்பூர்வ தகவல்!
மேட்-இன்-இந்தியா ஜீப் (Jeep) 7 சீட்டர் காருக்கு மெரிடியன் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பெயருக்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜீப் (Jeep) இந்தியா நிறுவனம் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய காரின் பெயரை உறுதி செய்திருக்கின்றது. மெரிடியன் (Meridian) எனும் பெயரிலேயே தனது புதிய காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இது ஓர் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.

இந்திய சொகுசு வாகன விரும்பிகளின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இக்காரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வைத்து உருவாக்கியிருக்கின்றது, ஜீப். இந்த சிறப்பம்சங்கள் நிரப்பட்ட வாகனமாக நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஜீப்.

இதன் வருகை இந்த ஆண்டின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இக்காருக்கு 70க்கும் அதிகமான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டநிலையில் மெரிடியன் எனும் பெயரை நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. இந்தியா பன்முக கலாச்சாரங்கள் மற்றும் அழகிய மாநிலங்களை இணைக்கும் நாடாக இருப்பதனால் இப்பெயரை தேர்வு செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு இருக்கைகளுடன் ஜீப் நிறுவனத்திடம் இருந்து விற்பனைக்கு வரும் முதல் கார் இது என்பதனாலேயே நாட்டில் இக்காரின் வருகை மீது எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவுகின்றது. மேலும், இந்த காரின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் பன்முக சோதனைகளில் ஈடுபடுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், நாட்டின் அனைத்து விதமான நிலப்பரப்புகளிலும் வைத்து சோதனை செய்யப்பட்டிருக்கின்றது. கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள வெவ்வேறு வித்தியாசமான பகுதிகளில் இக்கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

அனைத்திலும் ஜீப் மெரிடியன் குறைபாடற்ற முறையில் செயல்பட்டதாக நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் நிபுன் ஜே மகாஜன் கூறினார். இதைச் சொல்வதில் தான் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "மெரிடியனை எதிர்பார்க்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேட்-இன்-இந்தியா மற்றும் மேட்-ஃபார்-இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட காரை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

மெரிடியன் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், டீசல் மோட்டாரும் எதிர்பார்க்கப்படுகின்றது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம் பெற இருக்கின்றது.

சிறப்பம்சங்களைப் பொருத்தவரை இக்கார் ஏற்கனவே நாங்கள் கூறியதைப் போல் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் முன் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இத்தகைய அம்சங்களுடனேயே ஜீப் மெரிடியன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருவதால் சற்று குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ரூ. 35 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த சொகுசு கார் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீப் மெரிடியன் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








