சீன நிறுவனம் உருவாக்கிய முதல் ரோபோட் கார்... 'கதவை திறனு' சொன்னா தானா திறக்கும் வசதியுடன் வருகிறது!
சீன நிறுவனம் ஒன்று அதன் முதல் ரோபோட் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் எந்த கதவுகளிலும் கை பிடிகள் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்று கார்குறித்து வெளியாகியிருக்கும் இன்னும் பல முக்கிய தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் பைடு (Baidu). இந்நிறுவனத்தின் மற்றும் ஓர் அங்கமே ஜிடு ஆட்டோ. இந்நிறுவனம் பிரத்யேகமாக மின் வாகன உற்பத்தி பணியில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கான்செப்ட் வெர்ஷனில் ஜிடு ஆட்டோ (Jidu Auto) நிறுவனம் ஓர் 'ரோபோட்' (Robot) காரை உருவாக்கி, அதனை வெளியீடு செய்திருக்கின்றது.

புதுமுக கார் ரோபோ-1 (Jidu Robo-1) என்கிற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதுவே சீன நிறுவனம் உருவாக்கும் முதல் ரோபோட் காராகும். இந்த காரின் எந்த கதவிலும் கை பிடி இருக்காது. அப்போ எப்படி காருக்குள்ள நுழையறதுனு யோசிக்கிறிங்களா?.. பெருசா எதுவுமே செய்ய தேவையில்லை, 'கதவை திறனு' சொன்னா போதும், அந்த வாகனத்தின் கதவுகள் தானாக திறந்துவிடும். ஆமாங்க, குரலைக் கேட்டு செயல்படும் வசதியே இந்த காருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான காரையே ஆன்லைன் நிகழ்வின் வாயிலாக பைடு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஜிடு ஆட்டோ சீனாவைச் சேர்ந்த மற்றுமொரு நிறுவனமான கீலி (Geely)-யின் ஓர் அங்கம் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் புதிய ரோபோட் காரின் உற்பத்தி பணிகளை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஆகையால், தற்போது கான்செப்ட் மாடலாக காட்சியளித்திருக்கும் ரோபோ-1 எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் உற்பத்திக்கு தயாரான நிலையில் பொது பார்வைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிமுகம் 2023ம் ஆண்டில் அரங்கேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரில் மிக முக்கியமான தொழில்நுட்ப வசதியாக தன்னாட்சி லெவல் 4 (autonomous Level 4) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவே ரோபோட் காரின் மூலையாக செயல்படும். மிக தெளிவாக கூற வேண்டுமானால் மனிதர்களின் உதவி இன்றி கார் செயல்பட தன்னாட்சி லெவல் 4 (autonomous Level 4) பெரும் உதவியாக இருக்கும். இத்துடன், சேர்த்து குவால்கம் (Qualcomm) -இன் 8295 சிப்களும் ரோபோ-1 எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது இணையம் வசதி இல்லாத நேரங்களில் உரிமையாளர்களின் குரல் கட்டளைகளைப் பெற்று அதற்கேற்ப காரை செயல்பட வைக்க உதவும். முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றியைத் தொடர்ந்து ஹைட்ரஜன் ஃப்யூவல் செல், சோலார் மற்றும் ரோபோட் போன்ற ஸ்மார்ட் வாகனங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கயிருக்கின்றன.

இந்த நிலையிலேயே சீனாவைச் சேர்ந்த பைடு நிறுவனம் இந்த தரமான ரோபோட் காரை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இந்நிறுவனம் காரின் தன்னாட்சி இயக்கத்திற்காக இரு லிடார்கள் மற்றும் 12 கேமிராக்களையும் ரோபோட் காரில் பயன்படுத்த இருக்கின்றது.

இதில் லிடார் கருவியான ரேடார்களைப் போல் செயல்படும் ஓர் அம்சம் ஆகும். இது வாகனம் சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து, அவற்றிற்கேற்ப காரை செயல்பட வைக்கும். ஜிடு ஆட்டோ நிறுவனம் இக்காரின் உற்பத்தி பணிகளை நிங்கோ பகுதியில் அமைந்துள்ள ஹங்ஹூ பே ஆலையில் வைத்தே மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மேலும், இந்த காரின் உற்பத்தி பணிக்காக முன்னாள் கடில்லாக் நிறுவன டிசைனர் ஃபாங்க் ஊ-வை தற்போது நியமித்திருக்கின்றது. நிறுவனத்தின் இதுமாதிரியான செயல்களின் வாயிலாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை விரும்புபவர்களைக் குறி வைக்கும் முயற்சியில் பைடு நிறுவனம் களமிறங்கியிருப்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








